what-they-told

img

தில்லி படுகொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்

ஈரோடு, பிப்.27-  தில்லி படுகொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழு தெரிவித்துள்ளது. இததொடர்பாக நலக்குழுவின் மாநில தலைவர் எஸ். நூர்முகமது,  பொதுச் செயலாளர் ப. மாரிமுத்து ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அமைதியான வழியில் அனைத்துப் பகுதி மக்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். தில்லியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. \

இதை சீர்குலைக்கும் வகையில் ஆர். எஸ். எஸ்.  பாஜக கூட்டம் திட்டமிட்டு, சட்டத்துக்கு ஆதரவாக போராடுவதாக சொல்லிக்கொண்டு, வன்முறையாளர்களை களமிறக்கியுள்ளது. இந்த சங்பரிவார் கும்பல் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறுபான்மை மக்களின் கடைகள், வீடுகள், வாகனங்கள் போன்ற சொத்துக்களை அடித்து நொறுக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும் நாசமாக்கி உள்ளனர்.  இதுவரை ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி 37 என்பது நெஞ்சைப் பிழிவதாக இருக்கிறது. 

காவல்துறையின் பாதுகாப்புடன் அரங்கேறியுள்ள இந்த  வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள மத்திய அரசு இந்த திட்டமிட்ட வன்முறைகளுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.  உயிரையும், உடைமைகளையும் இழந்து வாடுகிறவர்களின்  குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அமைதியான முறையில் போராடுகிற மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.