what-they-told

img

இந்நாள் மே 11 இதற்கு முன்னால்

1949 - இரண்டாவது முறையாக தாய்லாந்து என்று பெயரை மாற்றுவதாக, சயாம் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கெனவே, 1939இல் தாய்லாந்து என்று பெயர் மாற்றப்பட்டு, 1946இல் மீண்டும் சயாம் என்று மாற்றப்பட்டது. ‘தாய்’ மொழியைப் பேசும் ‘தாய்’ மக்களின் நாடு என்ற பொருளுடன் இப்பெயர் சூட்டப்பட்டது. தென்கிழக்காசியாவில் செம்பும், வெண்கலமும் உற்பத்தி செய்யப்பட்ட இடமான இப்பகுதியில், கி.மு.2000இலேயே அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மோன், கெமர் ஆகிய மக்கள் வாழ்ந்து அரசுகள் அமைத்த இப்பகுதிக்கு, ஆறாம் நூற்றாண்டு வாக்கில்தான் ‘தாய்’ மக்கள் வந்துள்ளனர். ‘தாய்’ மொழியில் ‘தாய்’ என்பதற்கு சுதந்திர மனிதன் என்று பொருள்.

இப்பகுதியின் தொல்குடியினர் பண்ணையடிமைகளாக இருந்ததற்கு மாறாக, ‘தாய்’ மக்கள் சுதந்தரமானவர்கள் என்பதற்காக இப்பெயர் உருவானதாகக் கூறப்பட்டாலும், ‘தாய்’ என்பதற்கு மக்கள் என்றுதான் பொருள் என்ற கருத்தும் உள்ளது. சயாமிய (மத்திய ‘தாய்’), லான்னா(வட ‘தாய்’), இசான் (வடகிழக்கு ‘தாய்’), லாவ், ஷான் உள்ளிட்ட தென்கிழக்காசிய மொழிகள், தென்மேற்கு ‘தாய்’ மொழிகள் என்றழைக்கப்படுகின்றன. இம்மொழிகளைப் பேசியவர்கள், தற்போதைய தாய்லாந்து, லாவோஸ், மியான்மர்(பர்மா), கம்போடியா உள்ளிட்ட பகுதிகளில் ‘முவாங்’ என்ற நகர அரசுகளை உருவாக்கியிருந்ததால், ‘தாய்’ மக்கள் பேச்சு வழக்கில் ‘முவாங் தாய்’ என்றே தங்கள் நாட்டைக் குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய இந்தியாவின் அருணாசலபிரதேசம், அசாம் உள்ளிட்ட பகுதிகள் இத்தகைய முவாங் அரசாக 1228இல் உருவாக்கப்பட்டு, முகலாயர்களையும் சமாளித்தாலும், பர்மாவின் படையெடுப்புகளால் வலுவிழந்து, 1826இல் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டன. சயாம் என்ற பெயர் போர்ச்சுகீசியர்களால் சூட்டப்பட்டது. இப்பகுதியைச் சீனர்கள் ஸியான் என்று அழைத்ததை, போர்ச்சுகீசியர்கள் சயாம் என்று உச்சரித்திருக்கலாம் என்பதுட்பட பல கருத்துகள் இருந்தாலும், அது மற்றவர்கள் குறிப்பிடும் பெயராக மட்டுமே இருந்தது. ஹிட்லரையும், முசோலினியையும் பின்பற்றிய ஃபிபுன்(ஃபிபுன்சாங்க்ரம்) சர்வாதிகாரியாக ஆனதும், எல்லா ஃபாசிஸ்ட்டுகளையும் போலவே, மக்களின் நாட்டுப்பற்றைத் தூண்டிப் பயன்படுத்திக்கொள்வதற்காக, 1939இல் தாய்லாந்து என்ற பெயரைச் சூட்டினார்.

ஃபிபுன் ஜப்பானின் ஆதவாரளாக இருந்தபோதும், இரண்டாம் உலகப்போரில் தாய்லாந்தை ஜப்பான் ஆக்கிரமித்தது. அவர் பதவியிழந்ததும், மீண்டும் சயாம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பின்மூலம் மீண்டும் ஃபிபுன் பதவிக்கு வந்ததும், தாய்லாந்து என்ற பெயரும் மீண்டும் சூட்டப்பட்டது.