what-they-told

img

இந்நாள் மார்ச் 02 இதற்கு முன்னால்

1917 - நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல், ஜார் இரண்டாம் நிக்கோலஸ் முடிதுறந்ததையடுத்து, ரஷ்யாவின் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. 1905 புரட்சிக்குப்பின் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜாரின் அதிகாரங்கள் ஓரளவு பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டவையாக மாறியிருந்தன. 1904-05இல் நடைபெற்ற ரஷ்ய-ஜப்பானியப் போரின் தோல்வியே இதற்குக் காரணமாக அமைந்திருந்த நிலையில், முதல் உலகப்போரில் ஏற்பட்டுக்கொண்டிருந்த தொடர் தோல்விகளும், முடியரசின் அடிப்படையையே அசைத்திருந்தன. அரசின் நிதிநிலையை போர் மிகமோசமாகப் பாதித்திருந்த நிலையில், முடியாட்சி தொடர்வதற்கு, மரபு என்ற ஒன்றைத் தவிர வேறெந்தக் காரணமுமின்றிப் போயிருந்தது. ஆனால், முடியாட்சியை அகற்றுவதற்கு எந்தத் திட்டமிடலும் இருந்திராத நிலையில், ஏற்கெனவே போராடிக் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளர்களுடன்,  1917 பிப்ரவரி 23இல் திடீரென்று பொதுமக்களும் சேர்ந்து, போரைக் கைவிடக்கோரிப் போராடத் தொடங்கினர். போராடிய பொதுமக்களைக் கலைக்க, துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ராணுவத் தளபதிக்கு, ஜார் உத்தரவிட்டார். ஆனால், ராணுவ வீரர்கள் சுட மறுத்ததுடன், அணி அணியாக மக்களுடன் சென்று சேர்ந்து, போராடத் தொடங்கினர். இவர்கள்மீது காவல்துறை, துணை ராணுவப்படை ஆகியவை சுட்டதால், அது சண்டையாகவும் மாறியது. இந்நிலையில்தான் ஜார் இரண்டாம் நிக்கோலஸ் முடிதுறப்பதாகவும், தன் மகனும் முடிக்கு உரிமை கோரவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். ஜாரின் சகோதரர் மைக்கேல், பாராளுமன்ற முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மூன்று நூற்றாண்டுகால ரோமனோவ் மரபின் முடியாட்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தால் தற்காலிக அரசு நிறுவப்பட்டாலும், அரச மரபினரின் அதிகாரம், எதிர்காலம் ஆகியவை குறித்துத் தெளிவான முடிவெடுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தி புதிய அரசு உருவாக்கும் வரையிலான இடைக்கால அரசு என்றாலும், அதை இந்த அரசு செய்யாமல் காலம் தாழ்த்திக்கொண்டே வந்த நிலையில், செப்டம்பரில், ராணுவத் தலைமைத் தளபதி லாவ்ர் கார்னிலோவ் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார். அது தோல்வியடைந்தாலும், அதன் பின்னரே, ரஷ்யக் குடியரசு என்பது உருவாக்கப்பட்டு, முடியரசும் முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் தேர்தல் நடத்தப்படவோ, மக்களாட்சி அரசு தேர்ந்தெடுக்கப்படவோ இல்லை. இந்நிலையில், புரட்சி ஏற்பட்டு, போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட, இந்தக் குடியரசு 55 நாட்களில் (தற்காலிக அரசு மொத்தம் 8 மாதத்தில்) முடிவுக்கு வந்தது.