what-they-told

img

திருடக்கூடாது பிச்சை எடுக்க கூடாது என்கிற எங்கள் உறுதியை கொரோனா குலைத்துவிடுமோ: கோண்டி இன பழங்குடிகள் வேதனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இழந்துள்ளனர். தினக்கூலி அடிப்படையில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அன்றாட வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி, பசியாற்றி வந்த பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா முடக்கம் கோவை சுந்தராபுரம் அருகே வசிக்கும் கோண்டி பழங்குடி மக்களை கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மராட்டிய மண்ணில் இருந்து நாடோடிகளாக ஊரெல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் தமிழக மக்களின் அன்பான அரவனைப்பால் வேறு எங்கும் செல்லாமல் இங்கேயே தஞ்சமடைந்து விட்டோம். இப்போது கோயமுத்தூர் எங்களுக்கு புகுந்தவீடு மாதிரி. நாங்கள் முந்திரி, பாதாம், பிஸ்தா, மருந்து ஆகியவற்றை விற்று அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். 

முன்னர், எங்கேயாவது திருட்டுபோனால் இங்கே வந்து கோண்டியினத்தை சேர்ந்த யாரேனும் ஒருவரை போலீசார் கைது செய்து போவார்கள். அப்படி ஒரு காலம், ஆனால், இப்போது அப்படியில்லை. உழைத்து சாப்பிடுவோம். வருவாய் இல்லையென்றால் எங்கள் மக்களுக்குள்ளேயே கைமாத்து வாங்கி அன்றைய தினத்தை விரட்டிடுவோம். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் எங்களுக்கு இப்போது வரை எந்த கஷ்டமும் வரவில்லை. மேலும், திருடுவதில்லை..பிச்சை எடுப்பதில்லை என்கிற உறுதியை ஒவ்வொரு கோண்டியினத்தவரும் எடுத்துள்ளோம். இப்போது கொரோனா நோயால் யாருக்கும் வருவாய் இல்லை. கைமாத்து வாங்குவதற்கும் வழியில்லை என்கிற நிலை. ஆனால் இதேல்லாம் வயிற்றுக்கு தெரியாதே.. பசிக்கிறதே…குழந்தைகள் பாலுக்கு அழுகிறதே என்ன செய்ய. எங்களின் முந்தைய உறுதியை குலைக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வேதனையோடு.

தற்சமயம், கோண்டி காலனி பகுதியில் 300 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோண்டி பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த இப்பழங்குடிகள், சுமார் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். குடிசை மாற்று வாரியத்தினால் சிலருக்கு வீடுகள் கிடைத்துள்ள நிலையில், பலரும் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். 
இப்பகுதி மக்களின் தலைவர் என்று அழைக்க்கூடிய கலோலு கூறுகையில், பதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர்ந்த பழங்கள் விற்பனை செய்தல், ஸ்டெரிங் வெயர் பின்னுதல் உள்ளிட்ட வேலைகள் மூலம் கிடைக்கும் தினசரி வருமானமே, எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளோம். இதனால் உணவிற்கும், அன்றாட செலவுகளுக்கும்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றோம். தற்போது கடன் வாங்கவோ, கொடுக்க முடியாத நிலை இருக்கும் நிலையில், கொரோனாவிற்கு முன்பாக பசி கொன்று விடும் என்ற அச்சத்திற்குள்ளாகி உள்ளதாக வேதனை தெரிவித்தார். 

இப்பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பிரேம் கோண்டி கூறுகையில், உணவிற்கு வழியின்றி பசியால் தவித்து வருவது அறிந்து அரசு உதவிக்கரம் நீட்டினாலும், வழங்கப்படும் உணவு அனைவருக்கும் போதுமானதாக இல்லை. குறுகிய இடத்தில் ஏராளமானோர் வசித்து வருவதால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அனைவருக்கும் பரவ வாய்ப்பிருகிறது. ஆகவே, அரசு நிர்வாகம் முக கவசம், சனிடைசர் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு பத்துபேர் வரை இருக்கிறோம். ரேசன் கடைகளில் போடப்படும் பொருட்கள் மட்டும் போதுமா. தற்சமயம், சிட்கோவில் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினர் அரிசி, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்களை தந்து வருகின்றனர். ஆனால் இவர்களே தினமும் கொடுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை நிலை இருக்கும் எங்களின் வாழ்க்கை நிலை அறிந்து உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும். அரசுதான் இந்த தடைகாலம் முழுவதும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார். 
ஊரெல்லாம் சுற்றிய நாடோடிகள், ஊரடங்கில் திக்கற்று நிற்கிறார்கள். அவர்களுக்கு அரசு வழிகாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அ.ர.பாபு