weather

img

புரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....

சென்னை:
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யுமென, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட் டுள்ளது.கரையை கடந்த பின்னர்  குமரிக் கடல் பரப்பில் நிலை கொண்டு, பின்னர் 4 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம் பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரையிலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பரப்பில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

;