பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை உறுதி செய்தது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் பலமுறை வாதாட ராஜேஷ் தாஸுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் எச்சரிக்கையும் விடுத்தது. இந்த நிலையில், கடந்த பிப். 1-ஆம் தேதி முதல் ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 5 நாட்கள் கால அவகாசத்தின் படி பிப். 7-ஆம் தேதி தனது வாதத்தை நிறைவு செய்தார். அரசு தரப்பில் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, 3 ஆண்டு சிறை உறுதி செய்தது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.