tamilnadu

img

இயக்கத்தின் வேர்களாக இரண்டு தோழர்கள்

இயக்கப்பணி தொடர்பாக அண்மையில் திருவாரூர் சென்றிருந்தபோது, கட்சியின் தளமாக உள்ள ஒரு கிராமத்திற்குச் செல்ல விரும்பினேன். மாவட்டத் தோழர்கள் கூறிய செய்திகளின் அடிப்படையில் திட்டாணிமுட்டம் ஆலத்தாங்குடி கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தோம். எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் கட்சியின் குழுக் கூட்டங்கள், பேரவைகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் உள்ளிட்ட திட்டமிட்ட ஏற்பாடுகளோடு திரும்பிவிடாமல், மூத்த தோழர்களையும், கட்சிக் குடும்பங்களாகவே இயங்குவோரையும் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்தக் கிராமத்திற்குச் சென்றேன்.  கட்சியின் கிளை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், முதியோர், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் அங்கு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அக்கிராமத்தைச் சேர்ந்தவரும் சிஐடியு மாவட்டச் செயலாளருமான தோழர் முருகையன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தோழர் தம்புசாமி ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு அந்த கிராமத்தைச் சார்ந்த மூத்த தோழர்கள்  இலக்குமணன் (79),  கிருஷ்ணன்(76) இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் அவர்களைச் சந்தித்த மகிழ்ச்சியோடு கலந்துரையாடியதில் கிடைத்த தகவல்கள் என்னை ஈர்த்தது போலவே வாசகத் தோழர்களையும் ஈர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் உருவானதே இக்கட்டுரை.  கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கீழத்தஞ்சையில் (நாகை, திருவாரூர்) கிராமப்புறங்களில் ஒருபுறம் விரல்விட்டு எண்ணக் கூடிய மிராசுகளிடம்  நிலம் குவிந்திருக்க, மறுபுறம் தலித் சமூகங்களின் நிலமற்ற பண்ணையாள் குடும்பங்கள், குத்தகை விவசாயிகள் பரவியிருக்கிற நிலைமைதான் இருந்தது. தீண்டாமைக் கொடுமைக்கும், நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் தீரமிக்க போராட்ட இயக்கங்களை மேற்கொண்டன. அத்தகைய இயக்கங்களில் பங்குபெற்ற முந்தைய தலைமுறையினரில் பெரும்பாலோர் இன்று நம்மிடையே இல்லை. அந்த முதல் தலைமுறையோடு இணைந்து பணியாற்றிய பலரைப் பற்றிய கட்டுரைகள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. அத்தகையதொரு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்தான்  இலக்குமணனும் கிருஷ்ணனும். 

தோழர் ஆர்.இலக்குமணன்

தோழர் இலக்குமணன் 1940ம் ஆண்டு இதே கிராமத்தில் ஒரு தலித் பண்ணைத் தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர். கிராமத்தைச் சேர்ந்த வேதாந்தா ராஜய்யர் 30 வேலி நிலம் வைத்திருந்தார். கிராமத்தின் தலித் மக்கள் அவருடைய பண்ணையில்தான் கூலி வேலை செய்து வந்தார்கள். இலக்குமணனின் தந்தை ஒரு பண்ணையடிமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டவர். அவர்  தனது மகன் படித்து ஏதாவது வெளி வேலைக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் அவரை சேர்த்தார். 10ம் வகுப்பு வரை அந்தப் பள்ளியில் படித்தார் இலக்குமணன். தந்தையோடு ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் இவர் கோபித்துக் கொண்டு கும்பகோணம் சென்று ஒரு உணவகத்தில் வேலை செய்தார். அப்போது நடந்த ராணுவ ஆட்சேர்ப்பு முகாமுக்குச் சென்றவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சான்றிதழ் தொலைந்து போனதால் ராணுவத்தில் சேரமுடியாமல் போனது.  1956ம் ஆண்டு இலக்குமணனின் அண்ணன் இறந்து விட்டதால் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு வந்துசேர இலக்குமணன் கிராமத்துக்குத் திரும்பிவந்தார். தந்தை வேலை செய்த அதே பண்ணையில் இலக்குமணனும் கூலி வேலை செய்து குடும்பத்தை பாதுகாத்தார். உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று, விதவையான அண்ணன் மனைவியை திருமணம் செய்துகொண்டார். அண்ணனின் இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார். எம்.ஏ. படித்த மூத்த மகன் விருதுநகரில் சொந்த அச்சகம் நடத்தி வருகிறார். இளைய மகன் விவசாயப் பணியை செய்து வருகிறார். இருவரும் கட்சியின் ஆதரவாளர்கள். 

முசிறியம் ஊராட்சிக்குட்பட்ட திட்டாணிமுட்டம் கிராமம் உள்ளிட்டு சுற்றுவட்டார கிராமங்களில் 1950களில் விவசாயத் தொழிலாளர்களுடைய கூலி உயர்வுக்கான போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்பின்னணியில் 1957ம் ஆண்டு அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவானது. தோழர் கே.ஆர்.ஞானசம்பந்தம், காத்தமுத்து போன்ற தோழர்கள் அவ்வப்போது கிராமத்திற்கு கிளைக் கூட்டங்களை நடத்திக்கொடுக்க வந்ததாக தோழர் இலக்குமணன் தெரிவிக்கிறார். கட்சியும் விவசாயிகள் சங்கமும் நடத்திய போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்கேற்ற இலக்குமணன் 1958ம் ஆண்டில் கட்சியின் உறுப்பினரானார். அன்றிலிருந்து இன்று வரை எல்லா இயக்கங்களிலும் தோழர் இலக்குமணன் பங்கேற்றுவந்திருக்கிறார்.  நில உச்சவரம்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, உபரி நிலத்தை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய வலியுறுத்தி 1961ம் ஆண்டு தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மற்றவர்களோடு இலக்குமணனும் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்ட அவர், 3 மாதங்கள் திருச்சி சிறையில் இருந்தார்.  1968ம் ஆண்டு ஐயரின் பண்ணையில் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது மிராசுதாரின் ஆட்களுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தின்போது கே.ஆர்.ஞானசம்பந்தம், ஜி.பாரதிமோகன், பிஎஸ்.தனுஷ்கோடி, ஜி.வீரய்யன் ஆகியோர் தங்கள் கிராமத்திற்கு வந்த பின்னணியில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்ததை நினைவுகூர்ந்தார் இலக்குமணன்.. திட்டாணி முட்டம் கிராமத்தில் சாதி இந்துக்கள் வசிக்கக்கூடிய தெருவிலுள்ள பெருமாள் கோயிலுக்கு தலித் மக்கள் செல்லத் தடை இருந்தது. தலித் மக்களையும் ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தலித் மக்கள் ஆலய நுழைவுக்கு அனுமதிக்கப்படும்  வரையில் அந்தப் போராட்டங்கள் தொடர்ந்தன. அந்தப் போராட்டத்தில் இலக்குமணனும் கிருஷ்ணனும் முன்னிலை வகித்ததை தோழர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


தமிழகத்தின் மற்ற பல பகுதிகளைப் போலவே, திட்டாணி முட்டத்திலும் பிராமணர்கள், சாதி இந்துக்கள் வசித்து வந்த பகுதியில் தலித் மக்கள் குடியிருக்கவோ, சொந்தமாக வீடு கட்டவோ முடியாத நிலை இருந்தது. அக்கிரஹாரம் உள்ளிட்டு ஊருக்குள் தலித் மக்கள் குடியிருக்க உரிமை கோரி கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பரித்தியூர் சின்னப்பிள்ளை முயற்சியால் நிலங்கள் வாங்கப்பட்டு தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. தற்போது சுமார் 20 தலித் குடும்பங்கள் ஊருக்குள் மற்ற சாதிகளைச் சார்ந்த மக்களோடு இயல்பாக வசித்து வருகிற நிலை உருவாகியுள்ளது.. 

1964ம் ஆண்டு உருவெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இலக்குமணன்.  1965ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் வட்டச் செயலாளராக தோழர் ஜி.வீரய்யன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளில் டி.அய்யாறு குடவாசல் தாலுகா (தனிக் குழு) செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது இலக்குமணன் இந்த வட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார். மேலும் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினராகவும், ஒன்றியச் செயலாளராகவும் செயல்பட்டிருக்கிறார். 1985ம் ஆண்டு தோழர் கே.ரங்கசாமி சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அதன் குடவாசல் ஒன்றியச் செயலாளராக இலக்குமணன் செயல்பட்டிருக்கிறார். இப்போதும் விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினராகவும், கட்சி உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 

என்.கிருஷ்ணன்

இவரும் திட்டாணி முட்டம் ஆலத்தாங்குடி பகுதியில் ஒரு தலித் பண்ணைத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர்தான். 1943ம் ஆண்டு பிறந்த இவர் 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். வறுமையில் வாழ்ந்த குடும்பம் என்பதால் இவரை இதற்குமேல் அவரது தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே தன்னுடைய தந்தையோடு பண்ணையில் கூலி வேலை செய்துவந்தார் கிருஷ்ணன்.  திட்டாணி  முட்டம் கிராமத்திலும், சுற்று வட்டார கிராமங்களிலும் விவசாயிகளுடைய கூலிப் போராட்டங்களும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்க ளும் தீரத்துடன் நடந்த காலம் அது. அந்தப் போராட்டங்களில் கலந்துகொண்ட கிருஷ்ணன் விவசாயிகள் சங்கத்தில் இணைந்து, 1958ம் ஆண்டு அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.  1961ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற உபரி நில விநியோகத்திற்கான விவசாயிகள் மறியல் போராட்டத்தில் தோழர் இலக்குமணனோடு கிருஷ்ணனும் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு 3 மாதம் திருச்சி சிறையிலிருந்திருக்கிறார். விடுதலையாகி ஊருக்குத் திரும்பியபோது, சிறை சென்ற அனைவருக்கும் மாலை யணிவித்து, கொராடாச்சேரி ரயில் நிலையத்திலிருந்து கிராமத்திற்கு ஊர் மக்கள் அழைத்து வந்ததைப் பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார் கிருஷ்ணன். 

1968ம் ஆண்டு கிராமத்தில் நடைபெற்ற கூலி உயர்வுக்கான போராட்டத்தில் முக்கியப் பங்கேற்றார் கிருஷ்ணன். அதற்காக அவரைக் கொராடச்சேரியில் நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்க முற்பட்டார்கள். அவர்களிடமிருந்து  சாதுரியமாகத் தப்பித்துக் கிராமத்திற்குத் திரும்பினார். இப்போதும் வெட்டுப்பட்ட அவரது கால்களில் தழும்புகள் இருக்கின்றன. 1964ம் ஆண்டு கட்சித்   தலைவர்களில் ஒருவரான எம்.சண்முகம் தலைமையில் கிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 4 மகன்கள். அனைவரும் கட்சி ஆதரவாளர்கள். 1964ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது கிருஷ்ணனும் இணைந்துகொண்டார். அவ்வாண்டு கிருஷ்ணன் கட்சி கிளைச் செயலாளராகச் செயல்பட்டார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தம்புசாமி (பிற்படுத்தப்பட்டோர்), சிஐடியு மாவட்டச்செயலாளர் முருகையன் (தலித்) இருவரையும் கட்சிக்கு கொண்டுவந்ததில் தானும் முக்கியப் பங்காற்றியதைத் தெரிவித்தார்.

2006ம் ஆண்டும், 2011ம் ஆண்டும் தோழர் எம்.கலைச்செல்வி (தோழர் முருகையனின் துணைவியார்) இரண்டு முறை ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு நேர்மையாக செயல்பட்டார். 2 முறையும் ஊராட்சிமன்றத் தேர்தலில் நமது கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கிருஷ்ணன் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.  கிராமத்தில் நடைபெற்ற மேதின விழாவில் “வாழும் வரை போராடு”, “அறுவடை நாள்” ஆகிய நாடகங்களை உருவாக்கி இலக்குமணனும், கிருஷ்ணனும் அதில் நடித்திருக்கிறார்கள்.  திட்டாணி முட்டம் ஐயனார் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்பதற்குத்  தடை இருந்தது. கட்சியின் வழிகாட்டுதலோடு, 1990களில் ஆலய நுழைவுரிமைக்காக தோழர் இலக்குமணன், கிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற, தலித் மக்களும் அந்த விழாவில் பங்கேற்க அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்தது.  தோழர்கள் இலக்குமணனும், கிருஷ்ணனும் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு கட்சிப்பணியும், விவசாய சங்கப்பணியும் செய்து வருகின்றனர். இத்தகைய தோழர்களின் தன்னல மறுப்பும் ஈடுபாடு மிக்க பணியாலும்தான் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயகள் சங்கமும் துடிப்போடு செயல்பட்டு வருகின்றன என்றால் மிகையில்லை. வழிகாட்டியாய்த் திகழும் இவர்களது களப்பணி பாராட்டத்தக்கது, பின்பற்றத்தக்கது.