tamilnadu

img

விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய மழை....

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல்  வியாழக்கிழமை அதிகாலை கரையை கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் புதன்கிழமை மாலையில் இருந்து வியாழக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 17 செ. மீட்டர் மழை பதிவானது.விழுப்புரத்தில் 27 செ.மீட்டர், வளவனூர் 24, வானூர் 13, மரக்காணம் 13, திண்டிவனம் 14, செஞ்சி 15, திருவெண்ண நல்லூர் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.இரவு 11 மணி தொடங்கி அதிகாலை மரக்காணம் அருகே புயல் வலுவிழந்து கரையை கடந்த நிலையில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதனால் மரக்காணம் வானூர் பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.தொடர் மழையின் காரணமாக மரக்காணம் கிளியனூர் பகுதிகளில் 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தன.விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக அதிகாலையில் அகற்றினர்.

விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன் மனைவி ராஜேஸ்வரி 35 உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.புயல் பெரும் சேதம் ஏற்படுத்தாமல் கரையை அடைந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை காலை 10 மணி மழை விட்டும், வழக்கமான பகல் வெளிச்சம் வெயிலோடு இயல்புநிலைக்கு வந்தது.பலத்த மழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நகராட்சி மைதான காய்கறி சந்தை, இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.விழுப்புரம் அருகே வாணியம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின.விழுப்புரம் தாமரைக்குளம், பெரிய காலனி சுதாகர் நகர்ப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வீடுகளில் தண்ணீர் புகுந்தன.

விழுப்பும் மாவட்டத்தில் உள்ள வராக ஆறு, சங்கராபரணி, நரசிம்ம ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய, விழுப்புரம் நகரத்தில்நகராட்சி மற்றும் தீயணைப்புத் நிர்வாகத்தினர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் சி.வி‌. சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டனர்.வறட்சி நிலையில் இருந்த விழுப்புரம் மாவட்டம் ஒரே நாள் மழையில் நீர் வரத்து வாய்க்கால், சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.நிவர் புயலை கண்டு மாவட்ட மக்கள் பயந்தாலும், எதிர்பார்த்த அளவு அதிக சேதங்களை ஏற்படுத்தாமல் குடிநீர் தேவை மற்றும் விவசாய நீர் ஆதாரத்தை பெருக்கிய நிவர் புயலுக்கு நன்றி தெரிவித்து நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

;