விருதுநகர்:
சுயதொழில் செய்வோருக்கு ரூ.7500 இழப்பீட்டுத் தொகை அல்லது வங்கிகளில் வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு விருதுநகர் தொகுதி எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அக்கடிதத்தில் கூறியதாவது: கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் நீடித்த தடை உத்தரவால் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். மேலும், சுயதொழில் புரிவோர் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆட்டோ, கார் மற்றும் டாக்சி ஓட்டுனர்கள், வாகனங்கள் பழுது பார்ப்போர், குளிர் சாதன பெட்டி மெக்கானிக், கட்டுமான தொழிலாளர்கள், முடிந்திருத்துவோர் உள்ளிட்டோர் கையில் பணமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுபோன்ற நிலைமை எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சக்கட்டத்திற்கு வந்துள்ளது. எனவே தடை உத்தரவால் அவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாய் மாறியுள்ளது.எவ்வித வருமானமுமின்றி ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்பங்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மக்களின் நடமாட்டம் மீண்டும் தொடங்கியதோடு, பல்வேறு வணிகங்கள் செயல்பட்டால் தான் இவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
எனவே, இந்த முக்கிய தருனத்தில் இந்த நிலையை ஆய்வு செய்து சுயதொழில் செய்பவர்களுக்கு இழப்பீடாக ரூ. 7500 வழங்க வேண்டும். ஒருவேளை இழப்பீடு வழங்குவதற்கான நிதி திறன் அரசிடம் இல்லை என்றால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 15,000 வட்டி இல்லாத தனிநபர் கடன் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்.நீண்டகால ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.