tamilnadu

img

வறண்டு போன நீர் ஆதாரங்கள் : விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு....

விருதுநகர்:
பருவமழை பொய்த்துப் போன காரணத்தால் நீர் ஆதாரங்கள் வறண்டு போனது. இதன் காரணமாக விருதுநகர் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சரிவர மழை பெய்யவில்லை. இதன் காரணமாக விருதுநகர் நகராட்சிப் பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஆணைக் குட்டம் அணைக்கு நீர் வரத்து இல்லை. அணை முற்றிலும் வறண்டுவிட்டது. அணையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 13 கிணறுகளில் தண்ணீர் சுரப்பதும் குறைந்து விட்டது. நாளொன்றுக்கு 20 லட்சம் முதல் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி வந்த ஆணைக்குட்டம் நீர்த் தேக்கப் பகுதியிலிருந்து சுமார் ஐந்து லட்சம் முதல் ஆறு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தற்போதுகிடைக்கிறது.

வறட்சிக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி வந்த கோடை கால நீர்த்தேக்கம், காரிசேரி நீர்த் தேக்கம், ஒன்டிப்புலி நீர்த் தேக்கம் ஆகியவையும் முற்றிலும் வறண்டு விட்டது.  விருதுநகர் நகராட்சிமுழுக்க முழுக்க தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நம்பியே உள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 25 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. பகுதிவாரியாக 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே  நகராட்சி குடிநீர் வழங்குகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.12 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் இரு சக்கர வாகனங்களில் குடங்களை கட்டிக் கொண்டு குடிநீருக்காக பல கிலோ மீட்டர்தூரம் செல்கின்றனர்.விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளை இணைத்து புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் விருதுநகர் நகராட்சிப் பகுதி ,குடிநீர் தட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கும். இந்தத் திட்டத்தை வெறும்  அறிவிப்போடு நிறுத்தி விடாமல்செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.