tamilnadu

விருதுநகரில் மீண்டும் கொரோனா அபாயம்

விருதுநகர்:
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் மெயின் பஜார் அருகே உள்ள உள்தெரு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறுகலான அப்பகுதியில் மார்க்கெட் தொடங்கப்பட்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் மெயின் பஜார் அருகே உள் தெருவில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.இதற்கு நகராட்சியின் அனுமதி நீண்ட காலமாக வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் ஆசியோடு தொடர்ந்து அங்கு மார்க்கெட் செயல்பட்டு வந்தது.கொரோனோ தொற்று தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதைத் தடுப்பதற்காக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு காய்கறி சந்தை மாற்றப்பட்து. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க நகராட்சி மைதானம், உழவர் சந்தை, தனியார் பள்ளி மைதானம் ஆகிய இடங்களுக்கு சில்லறை காய்கறி கடைகள் மாற்றப்பட்டன.

இந்தநிலையில், எந்தவித அறிவிப்புமின்றி ஏற்கனவே இருந்த உள் தெருவிற்கு மொத்தகாய்கறிக் கடைகள் அனைத்தும் மாற்றப்பட்டுள் ளன. இதன் காரணமாக மெயின் பஜாரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. உள் தெருவானது 10 முதல் 15 அடி அகலம் மட்டுமே கொண்டது.அதில் 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகளை வாங்க மக்கள் அங்கு அதிக அளவில் கூடி வருகின்றனர். இதனால் விருதுநகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.