விருதுநகர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அக். 14 ஆம்தேதி (புதன்கிழமை) வருகை தருகிறார்.
தமிழகம் முழுவதும் முதல் வர் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் அக்.13-ஆம் தேதி தூத்துக்குடி வரும்அவர், அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அன்றிரவு நாகர்கோவிலில் தங்குகிறார். இதையடுத்து அக். 14- ஆம்தேதி கன்னியாகுமரி ஆட்சியர்அலுவலகக் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 2.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் அவர் அங்கு ரூ. 23 கோடியில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும்ரூ.11 கோடியில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பயனாளிகளுக்குநலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.இதன் பின்னர் கரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் ஆலோசனை
தமிழக முதல்வர் வருவதையொட்டி முன்னேற்பாட்டு கூட்டம்இரா. கண்ணன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,திருவில்லிபுத்தூர் சட்டமன்றஉறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூ.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.