விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.தொடக்க காலத்தில் சில பேருந்துகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிமனை தற்போது 50க்கும் மேற்பட்ட பேருந்துகளோடு இயங்குகிறது. 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என இங்கு பணிபுரிந்தாலும் அனைவரும் அவரவர் பணியினை சேற்றிலேயே செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இந்த பணிமனை துவங்கிய காலத்திலிருந்து கான்கிரீட் தரை தளம் போட வேண்டும் என பலமுறை நிர்வாகத்திடம் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பிலும் வலியுறுத்தப்பட்டும் இன்றுவரைக்கும் உயர் அதிகாரிகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதன் விளைவு? மழைக்காலங்களில் சேற்றில் புரண்டு பணி செய்ய வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு பணிமனைகளிலிருந்து கண்டமான பேருந்துகள் இங்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளதால் இடநெருக்கடி ஒரு புறம் இருக்க, முள்செடி, கொடிகளால் புதர்கள் சூழ்ந்து பாம்பு, தேள், பூரான் என பல்வேறு விஷ ஜந்துக்களின் அபாயங்களுக்கு குறைவில்லாமல் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பு சுவரும் கட்டப்படவில்லை. திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டால் ஜெனரேட்டர் அறைக்கு செல்வதற்கு தொழில்நுட்ப பணியாளர் உயிரை பணயம் வைத்துதான் செல்ல வேண்டும். ஓய்வறையில் குளியலறை, கழிவறை கள் சுத்தம் செய்யப்படாமலும், பழுதடைந்தும் காணப்படுகின்றன. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலையே தொடர்கிறது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற கேண்டீன் உணவு உரிமை தனியாரிடம் சமையல் பணி கொடுக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. இப்படி ஒப்பந்தம் விட்டதால் இதில் டோக்கன் முறைகேடு மூலம் ஊழல் நடைபெற்று அலுவலக பணியாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் குறைபாடுகளை போக்குவதற்கு அக்கறை காட்டாத ஆளும் கட்சி தொழிற் சங்கத்தினர் வண்டிக்கு போஸ்டிங் என்ற பெயரில் பணம் கறப்பதில் தவறுவதே இல்லை. இப்படிப்பட்ட ஏராளமான குறைபாடுகளோடும் தொழிலாளர் களை கசக்கிப் பிழிந்து மிரட்டி வேலை வாங்குவதோடு, தான் வேலை செய்யாமலேயே மாற்றுப்பணி என்ற பெயரில் சம்பளம் பெற்றுக்கொண்டு, அதைவிட பலமடங்கு தொழிலாளர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டு பிழைக்கும் ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மீதும், பணிமனையின் குறைபாடுகளை போக்குவதற்கும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- வி.சாமிநாதன்.