உளுந்தூர்பேட்டை, ஆக. 13- பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக் கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத உளுந்தூர்பேட்டை வட்ட, ஒன்றிய நிர்வாகத்தின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் கிராம தலித் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லாத இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார் பூங்கொடி என்பவர். உள்ளூர் பிரச்சனையால் இவரது வீட்டை இடித்து தள்ளுவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் பூங்கொடிக்கு பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் பூங்கொடி வீடு கட்டி இருக்குமிடம் ஆக்கிரமிப்பு எனக் கூறி, இவரது வீட்டை செவ்வாயன்று (ஆக. 13) இடிக்கப் போவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து சிபிஎம் சார்பில் பிள்ளையார்குப்பத்தில் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் களமருதூரில் உள்ள பொது சத்திரத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், பா.கிள்ளனூரில் அரசுப் பள்ளிக்கு சொந்தமான இடத்தையும், ஆத்தூர் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், கோட்டையாம் பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு தரிசுநில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் இ.அலமேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.