விழுப்புரம்.பிப்.23- தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையர் ஆர். பழனிச்சாமி ஆய்வு செய்தார். விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்துக்கு வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு ஆவணங்கள், படிவங்கள், தேர்தல் பயன்பாட்டுப் பொருள்களைப் பார்வையிட்டார். மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு மற்றும் ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் தேர்தலுக்கான பட்டியல், தேர்தல் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா எனவும், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா எனவும் கேட்ட றிந்தார். உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறைப் பணி நிலவரங்களையும் கேட்டறிந்தார். தேர்தல் ஏற்பாடுப் பணிகளை விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்திச் சென்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுச் செயலாளர் செந்தில்வடிவு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.