tamilnadu

img

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆவேசப் போராட்டம்

புதுச்சேரி, பிப்.6- கட்டண உயர்வை எதிர்த்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு பல பாடப் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு நிறுவப்பட்டது. அதுமட்டுமின்றி போக்குவரத்து கட்டணமும் ரூ.4 ஆயிரம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து முன்னாள் மாணவர் பேரவை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சில பாடப்பிரிவில் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டு மாணவர் பேரவை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு போக்குவரத்து கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நிர்வாகம் மாணவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர் பேரவை தலைவர் பரிசெய் யாதவ் மாணவர்களின் நலனுக்காகவும், கல்வி உரிமைக்காகவும் இந்த போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

மாணவர் பேரவையின் அழைப்பைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நிர்வாக பிரிவை முற்றுகையிட்டனர். பேரவையின் முக்கிய கோரிக்கைகளில் கட்டண உயர்வை ரத்து செய்தல், போக்குவரத்துக் கட்டணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் பாண்டிச்சேரி பூர்வீக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவை அடங்கும். கட்டண உயர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. மாணவர் பேரவை புறக்கணிக்க அழைப்பு விடுத்த போது, பதிவாளர் (பொறுப்பு) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில் போராட்டத்தை கலைக்கும் முயற்சியாக, வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்களின் விவரங்களை அனுப்புமாறு துறைகளை கேட்டுக் கொண்டார். இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான மாணவர்கள் அணி வகுப்பில் இணைந்தனர். நிர்வாகப் பிரிவுக்குள் மாணவர்கள் நுழைவதைத் தடுக்க காவல்துறை மற்றும் பாதுகாப்பு காவலர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையின்றி போராட்டம் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.