தேனி, ஜூலை 12- லடாக் எல்லையில் வாகன விபத்தில் உயிரிழந்த தேனியை சேர்ந்த ராணுவவீரர் உடல் அரசு மரியாதை யுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அழகுராஜா (43). இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரெஜிமெண்ட்டில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அழகுராஜா கடந்த 9-ஆம் தேதி புவனேஸ்வரில் இருந்து ராணுவ தளவாடங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு லடாக் எல்லைக்கு புறப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் சுட்டுபாலு என்ற இடத்தில் மலைப்பாதை யில் வந்தபோது பாறையில் வாகனம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல், சொந்த ஊரான துரைசாமிபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழகுராஜா உடலுக்கு உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அழகுராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அழகுராஜா வின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை அவரது மனைவி ராணி, மகள் வர்ஷனா, மகன் தேஜஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.