tamilnadu

img

மின் கட்டணத்தை ரத்து செய்க; உற்பத்திக்கான மூலப் பொருட்களை அரசே வழங்கிடுக!

இரும்பு, மர பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

மதுரை மாநகர் பகுதியில் இரும்பு மற்றும் மர பர்னிச்சர் உற்பத்தி பட்டறையாளர்களின் நெருக்கடியினை கருத்தில் கொண்டு அரசு மின் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும். தொழில் உற்பத்திக்கான மூலப்பொருட்களை தொழில் நலத்துறை சார்பில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் பகுதியில் இரும்பு பட்டறை வைத்துள்ள மாரியப்பன் என்பவர் கூறுகையில், கொரோனா நோய் தொற்றை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களும் நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து எங்களுடைய தொழில் நிறுவனங்களை மூடியுள்ளோம். தற்போது பட்டறைகள் மூடப்பட்டதால் தொழில்கள் எதுவும் நடக்காத சூழ்நிலை ஏற்பட்டு தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தும் சிறு உற்பத்தியாளர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட இரும்பு பட்டறைகள் செயல்படுகின்றன. குறிப்பாக இரும்பு கதவுகள், ஜன்னல் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறோம், ஒரு பட்டறைக்கு குறைந்தபட்சம் 5 முதல் 10 தொழிலாளர்கள் வரை வேலை பார்த்து வருகிறார்கள்.

வட்டியில்லா கடன் வழங்குக

மதுரை மாவட்டத்தில் இதுபோல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இயங்கி வருகின்றன. ஏற்கனவே பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவைகளால் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இது மே மாதம் வரை தொடரும் என்ற நிலையில் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில்தான் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக வாரத்திற்கு ரூ. 300 முதல் ரூ.600 வரை எங்களால் முடிந்த உதவியை கடனாகக் கொடுத்து வருகிறோம். இதில் எங்களுடைய குடும்ப சூழ்நிலைகளும் உள்ளது.

இதுபோன்ற நேரத்தில் தமிழக அரசு மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று கூறியுள்ளது ஆனால் மே 6ஆம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்த சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தேக்க நிலையில் உள்ளது. இதுபோன்ற நஷ்டங்களை ஈடு கட்டும் வரை அரசு கொரோனா நோய்த்தொற்றை பேரிடராக அறிவித்துள்ள நிலையில் அதைக் கணக்கில் கொண்டு மின்கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் தொழிலுக்கான மூலப்பொருட்களை தொழில் துறை மூலம் ரேசன் முறையில் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . 

வங்கி நிர்ப்பந்தம் தற்கொலையில் முடியும் ஆபத்து

பாதிப்பு குறித்து பர்னிச்சர் உற்பத்தியாளர் தனசேகரன் என்பவர் கூறியதாவது: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான பர்னிச்சர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து பெரிய கடைகளுக்கும், பர்னிச்சர் ஏஜென்சி மற்றும் வெளிநாடுகளுக்கும் மரக்கட்டில், மர பீரோ, டைனிங் டேபிள் என்று ஏற்றுமதி செய்து வருகின்றோம். அதேபோல் மதுரை மாநகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பர்னிச்சர் கடைகள் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவில் காண்ட்ராக்ட் மூலம் பொருட்களை செய்து கொடுத்து வருகிறோம்.

எங்களிடம் பணியாற்றுபவர்கள் அதிகபட்சம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக தான் பணியாற்றுகிறார்கள். வாரத்திற்கு அவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3500 வரை ஊதியம் வழங்கப்படும். ஒரு பட்டறைக்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து தொழிலாளர்களை வேலை செய்து வருகிறார்கள். அரசு திடீரென்று அறிவித்த ஊரடங்கு உத்தரவால் வெளியிலிருந்து ஆர்டர் கொடுத்து தயாரித்து வைக்கப்பட்ட சரக்குகளை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு தற்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். இந்தநிலையில் வேலைபார்த்த தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வேலையில்லாத கால நிவாரணமும் வெளியில் கடன்களை வாங்கி வழங்கியுள்ளோம். நிவாரணம் என்றாலும் அவர்கள் பணத்திலிருந்து தான் கடனாக தற்போது கொடுத்துள்ளோம். இந்த நிலையில் வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடனை தற்போது கட்டச் சொல்லி வங்கி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. தொடர்ச்சியாக கட்டவில்லை என்றால் அதற்கான வட்டி தொகையுடன் கட்டச் சொல்லி கூறிவருகிறார்கள். வங்கியில் வாங்கிய கடனை கட்டித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். அடுத்து குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவற்றை சமாளிக்க வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து வருகிறோம்.

ஒரு மாதத்தில் குறிப்பாக 15 அல்லது இருபது நாட்கள் தான் வேலையே இருக்கும். தற்போது ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களுக்கு மேல் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மின்கட்டணம் வேறு கட்டச் சொல்லி அரசு கூறியுள்ளது. 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பணிகள் துவங்கினாலும் 6ஆம் தேதிக்குள் மின்கட்டணத்தை கட்ட சொல்கிறார்கள், இரண்டு தினங்களில் பணத்தை ஏற்பாடு செய்து எப்படி கட்ட முடியும், ஊரடங்கு காலத்தில் தொழில் நிறுவனங்கள் இயங்காத நிலையில் அதற்கான மின்கட்டணத்தை சிறிய சிறிய தொகையாக வரும் காலங்களில் அரசு கட்ட சொல்வதற்கு மின் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். அல்லது சிறு குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும் என்றால் அதற்கான மின்கட்டணத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வங்கிகள் தொடர்ந்து கடன் தொகைகளை வேலை இல்லாத காலங்களில் கட்டச் சொல்லி நெருக்கடி கொடுத்தால் அது சாமானிய மக்களை தற்கொலை முயற்சி வரை கொண்டு செல்லும் என்பதை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜெ.பொன்மாறன்.