லெபனான் நாட்டில் நேற்று நடந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட பலர் மாயமாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று எதிர்பாராத விதமாக பெரும் வெடி விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் தரை மட்டமாகி உள்ளன. இடிந்த கட்டிடங்களில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை செயலாளர் ஹமாத் ஹசன் கூறும்போது, “ பலர் மாயமாகி உள்ளனர். தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் தேடுதல் பணி சிரமமாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் கவர்னர் மர்வான் அப்பவுட் கூறும்போது, “100க்கும் அதிகமான மக்கள் மாயமாகி உள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்களும் அடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த குறித்து லெபனான் பிரதமர் ஹசன் கூறும்போது, “சுமார் 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்றார்.