ராஜஸ்தானில் கோவிலுக்குள் செல்ல முயன்ற சிறுவன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குள் பட்டியல் இன சிறுவன் செல்ல முயன்றபோது அங்கிருந்த சிலர் அச்சிறுவனை கட்டி வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்த செய்திகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவில் சிறுவனை கை கால்களை கட்டி வைத்து 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்துகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் பூசாரியின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் சிறுவனை தாக்கியவர்களையும் சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் இரு குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.