tamilnadu

img

மோடி அரசின் ‘இ-பைக்’ திட்டத்தால் ஆட்டோ மொபைல் துறையினர் அதிர்ச்சி

மும்பை:
மோடி அரசானது, ‘இ-பைக்’ (E-Bike) திட்டத்தைக் கொண்டு வரும் முடிவில் தீவிரம் காட்டி வருவதாகவும், இதனால்,ஆட்டோ மொபைல் துறையில், 40 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இவ்விவகாரத்தில் பஜாஜ், டிவிஎஸ் போன்ற பெருநிறுவனங்களே, மோடி அரசின் நடவடிக்கைகளால் கொதித்துப் போயிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தொழில் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அவர்கள், இ-பைக் திட்டத்தைப் பொறுத்தவரை, ஓரணியில் திரண்டு, நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், மோடி அரசு செய்யும் விஷயங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. தொழிற்துறையினரைப் பொறுத்தவரை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவை ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இன்னும் முழுமையாக மாறவில்லை.

இந்நிலையில்தான், மோடி அரசு கையிலெடுத்திருக்கும் ‘இ பைக்’ மற்றொருபுதிய பிரச்சனையாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.அதாவது, 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து பெட் ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க, மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல 150 சிசி-க்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாகத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. மோடி அரசின் திட்டத்தைஅறிந்த உடனேயே, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள், தங்களின் சிரமங்களைச் சொல்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.“இவ்வாறு தடாலடியாக அரசு இ-பைக் (E-Bike)-க்கை கொண்டு வரநினைப்பது, மக்களுக்கு மட்டும் பெரும்
சுமையாக இருக்காது. ஒட்டு மொத்தஇந்திய ஆட்டோமொபைல் துறையையே தடம் புரட்டிவிடும். இந்த ஆட்டோமொபைல் துறையை நம்பி இருக்கும் 40 லட்சம் ஊழியர்களின் வேலைகள் முழுமையாக பறி போகும்” என டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கொதித்துள்ளார்.

“இந்தியாவில் இ-பைக்குகள் வரலாம், ஆனால் அந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் இ-பைக் மாற்றத்தினால் ஏற்படும் லாப நஷ்டங்களை சரிகட்ட முடியும்” என்று கூறியிருக்கும் வேணு ஸ்ரீனிவாசன், “இந்த மாற்றம் நிலையானதாக, நீண்டநாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய டெக்னாலஜி கொண்டதாக இருக்க வேண்டும்” எனவும் கூறி இருக்கிறார்.

“ஏற்கெனவே, இந்திய ஆட்டோமொபைல் துறை, ‘பாரத் ஸ்டேஜ் 6’-க்காக நிறைய செலவு செய்திருக்கிறது; வரும் ஏப்ரல் 2020-இல் இருந்து ‘பாரத் ஸ்டேஜ் 6’ வாகனங்களைத்தான் விற்க வேண்டும் என்பதால், இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, இப்போதுதான் உற்பத்தி ஆலைகளை எல்லாம் மாற்றி அமைத்துள்ளோம். அவ்வாறிருக்கும்போது, இப்போது திடீரென இ-பைக் மட்டும் தான் விற்கவேண்டும் என்று சொன்னால் என்னசெய்வது? என்று ஆட்டோ மொபைல்துறை அனலிஸ்டுகளும் குரலெழுப்பியுள்ளனர்.“இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 7 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் விற்கின்றன. 150 சிசி-க்கு கீழான இருசக்கர வாகன விற்பனையைக் எடுத்துக் கொண்டால், ஓராண்டுக்கு 1 கோடியே 90 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனை நடக்கிறது. இரு சக்கர வாகன விற்பனையில் இருந்து மட்டும் சுமார்

1 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவின் ஜிடிபி கணக்கில் ஏறுகிறது. அப்படியிருக்க, திடீரென இ-பைக் சட்டம் கொண்டு வந்தால் என்ன செய்வது..? இந்தியாவில் பெரிய அளவுக்கு, இ-பைக் பயன்பாடு இன்னும் வரவில்லை. அதையும் மீறி, மிகவேகமாக இ-பைக்குகளை கொண்டு வர, இந்தியஆட்டோமொபைல் துறையில் நமக்குநல்ல அனுபவமோ அல்லது ‘இ-பைக்’-குகளுக்கான தேவையோ இப்போதைக்கு இல்லை. மேலும், இந்திய மூன்றுசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருப்பது பஜாஜ் ஆட்டோ தான். இந்தஆட்டோக்களில் இயற்கை எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கே போதுமான எரிவாயு நிரப்பும் பங்குகள் இந்தியாவில் இல்லை. அப்படியிருக்கும்போது, அன்றாடம் மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான சார்ஜிங் பாயிண்டுகளையே ஏற்படுத்தாமல், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் அனைத்தையும் இ-பைக்-க்குகளாக மாற்றப் போகிறோம் என்றால்... எப்படிவிற்க முடியும்?” என்று பஜாஜ் நிறுவனமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

;