‘தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை’
தஞ்சாவூர், மே.3- தமிழ்நாட்டில் இதுவரை மின் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின் வாரிய தலைவரும் மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நிகழாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10 ஆம் தேதிக்கு பிறகு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று வந்த பிறகு மின் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாது. இதனிடையே மேற்கொள்ளப்படும் மின் கொள்முதல் செய்யும் நிலையும் மாறும். அதே நேரத்தில், அவ்வப்போது வீசக்கூடிய சூறாவளி காரணமாக மரங்கள் சாய்ந்து, மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் பாதிக்கப்படும்போது, ஊரகப் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதற்காக நடமாடும் குழு அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். மின் நுகர்வோர்கள்தான் நமக்கு ராஜாக்கள். எனவே, அவர்களுடைய குறைகளை நள்ளிரவிலும் ஊரகப் பகுதியாக இருந்தாலும், பாரபட்சமின்றி சென்று நிவர்த்தி செய்ய வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மிக விரைவாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகிறோம்” என்றார்.
திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கல்
புதுக்கோட்டை, மே 3- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 55 திருநங்கைகள் கலந்துகொண்டு வீட்டுமனைப் பட்டா, சிறுதொழில் கடன், ஆதார் திருத்தம், மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த மாதம் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், திருநங்கை ஒருவர் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்ததன் அடிப்படையில், ஒரு திருநங்கைக்கு புதிய குடும்ப அட்டையை ஆட்சியர் வழங்கினார்.
மஞ்சள் நோய் தாக்காத புது ரக கரும்பை அரசு உருவாக்கித் தர விவசாயிகள் வேண்டுகோள்
பாபநாசம், மே 3- அய்யம் பேட்டையிலிருந்து - கணபதி அக்ரஹாரம் செல்லும் சாலையின் இரு புறமும் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. அதில் மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் நெல், வாழைக்கு மாறினர். மேட்டுப் பாங்கான பகுதிகளில் இருந்த வாழை பரவலாக எங்கும் பரவியது. இது குறித்து கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டிற்கு முன்பு, கரும்பு பயிரிட்டிருந்தோம். சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டிருந்ததால், வெல்லத்திற்கு என விலை கம்மியாக கேட்டதால், அதிக கூலி கொடுத்து கரும்பை வெட்டி அப்புறப்படுத்தினோம். வெட்டுக் கூலியே ரூ.600 கொடுத்தோம். ஆனால் கரும்பு டன்னிற்கு ரூ.1,200, 1,800 வரை தான் போனது. சிலர் கொல்லையிலேயே கரும்பை கொளுத்தி விட்டதும் நடந்தது. கணபதி அக்ரஹாரத்திலிருந்து காவேரி ஆறு வழியாகச் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தித்தில் கரும்பு சாகுபடி தான். கிருஷ்ணாபுரம், உள்ளிக் கடையில் 300 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடை செய்த கரும்பை சாலையில் கிடத்தியிருப்பர். அரசாங்கம் கரும்பிற்கு டன்னிற்கு ரூ.4,000 என நிர்ணயித்தும் விவசாயிகள் கரும்பு சாகுபடி மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். இதற்கு கரும்பில் நேரிட்ட மஞ்சள் நோய் தாக்குதல் தான் காரணம். மஞ்சள் நோய் தாக்காத புது ரக கரும்பை அரசாங்கம் உருவாக்கித்தந்தால், இப்பகுதி விவசாயிகள் மீண்டும் கரும்பிற்கு மாறுவர். இதேபோன்று ரேஷனில் விரும்பும் கார்டுதாரர்களுக்கு ஜீனிக்குப் பதில் வெல்லம், நாட்டுச் சர்க்கரை தரலாம். இதனால் கரும்பு விவசாயம் மீண்டும் செழிக்கும் என்றனர்.
நீலகண்டப் பிள்ளையார் கோவில் திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தில், நீலகண்டப் பிள்ளையார் கோவிலில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், தொழிலதிபர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், சங்கரன் வகையறாக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, மே 14 ஆம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. மே 12 அன்று தீர்த்த திருவிழாவும், மே 13 அன்று திருக்கல்யாணம், தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. திருவிழாக் காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சமய சொற்பொழிவு நடைபெறுகிறது.
முன்விரோதம்: தாக்குதலில் ஒருவர் கைது
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்(53). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தமிழரசன் (25). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி, விளார் ரோடு, பர்மா காலனி பகுதியில் பாண்டியனை பார்த்த தமிழரசன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாண்டியன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் தாலுகா உதவி ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.