சென்னை, மே 11- போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தும் பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திவரும் போருக்கு எதிராகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வடசென்னை மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியை பெரம்பூரில் சனிக்கிழமை (மே 11) மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சரவணத்தமிழன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.அபிராமி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஸ்டாலின், எஸ்.கார்த்திக், கு.சுரேஷ்சா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுபாஷ், ஜபருல்லா கான், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இதுகுறித்து தலைவர்கள் கூறுகையில், நவீன உலகம் உருவான காலத்தில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு 27 முறை பூமி பந்தை சிதறடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஏகாதிபத்திய நாடுகள் தயாரிக்கும் ஆயுதங்களை விற்பனை செய்ய பிற நாடுகளுக்குள் போரை உருவாக்குகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதி ஆயுதங்களுக்கும் ராணுவத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. மக்கள் பணத்திலேயே மக்களை கொல்கிறார்கள். எல்லா போர்களும் மக்களுக்கு எதிரானவை. போரை அறிவிக்கும் அதிபர்கள் எவரும் போரில் பங்கேற்று சாவதில்லை, மாறாக ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளே ராணுவத்தில் சேர்ந்து போரிட்டு செத்து மடிகிறார்கள். பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும், மக்கள் குடியிருப்புகளும் போரால் இடித்து அழிக்கப்படுகின்றன. வலுவில்லாத முதியவர், வாழ்வை ஆரம்பிக்காத குழந்தைகள், ஏற்கனவே வலிகளை சுமக்கும் பெண்கள் மீது வெடிகுண்டுகள் வீசிக் கொல்லும் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மக்கள் வாழட்டும், குழந்தைகள் படிக்கட்டும், போர் வேண்டாம், அமைதியும் வளர்ச்சியும் தான் வேண்டும். எனவே பாலஸ்தீனம், ஈரான், சிரியா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்புவோம். ஒன்றுபட்டு குரல் எழுப்பினால் நிச்சயம் இதற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.