tamilnadu

img

மாதர் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் போராட்டம் வெற்றி.... வடமதுரை சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு தமிழக அரசு மேல்முறையீடு

மதுரை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்நடத்திய போராட்டத்தின் விளைவாக, வடமதுரை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. 

குற்றவாளியை விடுவித்து தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்த  முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான12 வயது சிறுமியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபிரகாஷ், டார்வின் சிங் ஆகிய கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, வாயில் மின் வயரை செலுத்தி கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டன. எனினும் வடமதுரை காவல்துறையினர் கிருபானந்தம் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி புருஷோத்தமன் செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கு விசாரணையின் போது, சிறுமியை நான்தான் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தேன் என்று கிருபானந்தம் இரண்டுமுறை வாக்குமூலம் அளித்திருந்த போதிலும், கிருபானந்தம் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக 35பேர் சாட்சியம் அளித்திருந்த போதிலும், கிருபானந்தம் மீதான குற்றச்சாட்டு கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்வதாக கூறி நீதிபதி அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பினை அளித்தார்.

இத்தீர்ப்பு மோசடியானது என்று கூறிஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்றத்திலேயே போராட்டம்  நடத்தினர். தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம்,  முடிதிருத்துவோர் சங்கம் உள்ளிட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு செய்து போராட்டம் நடத்தினர். 3.5 லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. 

கே.பாலகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்  இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். சிறுமி கொல்லப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள்  மீது நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் திண்டுக்கல், வடமதுரை உள்பட பல இடங்களில் சிபிஎம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விதொச உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

மேல்முறையீடு
இத்தகைய தொடர் போராட்டத்தின் விளைவாக, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறைஅமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.  அதன்படி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், சுந்தரவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.