புதுதில்லி, மார்ச் 17- கல்வி நிலையங்களுக்கு முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர கர்நாடக அரசுத் தடை விதித்ததை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரியுள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மகளிர் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம் உட்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் அவர்கள் கோரி இருப்பதாவது: கர்நாடக உயர்நீதிமன்றம், முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமின் நடைமுறையின்படி அவசியம் அல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் சீருடைகளை நிர்ணயிப்பதற்கு உரிமை பெற்றிருக்கின்றன என்றும், கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் சீருடை எதுவாக இருந்தாலும் முஸ்லீம் பெண்களும் அத னைப் பின்பற்றிட வேண்டும் என்றும்கூறியிருக்கிறது. இந்தப் பிரச்சனை தொடர்பாக உச்சநீதி மன்றத்திற்கு ஏற்கனவே தெரியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உச்சநீதிமன்றம், முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதைப் பாதுகாத்திடும் என்றும், பள்ளி அல்லது கல்லூரி சீரு டைகள் என்ற பெயரில் பெண்களுக்குப் பாகுபாடும், விலக்கும் அளிக்கப்படுவதிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்திடும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
கல்லூரி வளர்ச்சிக் குழுக்களின் நினைவுக்கு
கர்நாடக உயர்நீதிமன்றம், சீருடைகள் குறித்து கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் நிர்ணயிப்பதற்கு உரிமை உண்டு என்றும் அங்கீகரித்திருக்கிறது. கர்நாடகாவிலேயே, பல கல்லூரிகள் தாங்கள் நிர்ணயித்திடும் சீருடைகளுடன் ஹிஜாப் அணிந்து வருவதற்கும் அனுமதித்து விதிகள் ஏற்படுத்தி இருக்கின்றன. எப்படி சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்துவரவும், இந்துக்கள் குங்குமப் பொட்டு, கழுத்தில் ஆபரணங்கள் முதலானவை அணிந்துவர அனுமதித்திருப்பதுபோல், முஸ்லீம் பெண்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி வளர்ச்சிக்குழுக்கள் அனுமதித்திட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். கர்நாடகாவிலேயே இதுநாள்வரையிலும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எந்தக் கல்லூரியும் தடை விதித்திட வில்லை என்பதையும் கர்நாடக கல்லூரி வளர்ச்சிக் குழுக்களுக்கு நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம். உண்மையில், ஒரு கல்லூரியின் விதிகள், தங்கள் கல்லூரியின் சீருடையின் வண்ணத்துடன் ஒத்துப்போகும்விதத்தில் ஹிஜாப் அணிந்து வர அனுமதித்திருக்கிறது. ஆகையால், இது பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையே அல்ல. இது, இந்து மேலாதிக்கவாதிகள் முஸ்லீம் பெண்கள் கல்வியைத் தொடர்வதைத் தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு விதிகளில் திருத்தம் கொண்டுவர நிர்ப்பந்தித்துள்ளதுதான். எனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடனடியாகத் தடை விதித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமை மீதும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தின் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். கர்நாடக உயர்நீதிமன்றம், முஸ்லீம் மாணவிகளுக்கு மட்டுமல்ல, முஸ்லீம் ஆசிரியர்களுக்கும் இவ்வாறு தடை விதித்திருக்கிறது. இதனைக் கண்டித்து சில முஸ்லீம் ஆசிரியைகள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார்கள். இது முஸ்லீம் பெண்களை அவமதிக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)