திண்டுக்கல்,அக்.20- உயர வளர்ச்சி தடைபட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ஆம் நாளன்று உயரம் தடைபட்டோர் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு அக்டோபர் 20 வியாழனன்று சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில், மாநிலத் தலைவர் வில்சன், மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவகுமார், முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உயரம் தடைபட்ட 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கோரிக்கைகள்
உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு களில் சிறப்பு திட்டங்களை உருவாக்கிடவேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டிக்கொடுத்திட வேண் டும். மாதாந்திர உதவித்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டி பாதுகாத்திட வேண்டும். கேலி, கிண்டல் செய்வதை தடுக்க மாநில அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திட வேண்டும். அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். அரசுப்பேருந்துகள் அனைத்தி லும் தாழ்வாக அமையும் வகையில் படிக்கட்டுகள் அமைத்திட வேண்டும்.ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர்கள் உயர வளர்ச்சி தடைபட்டவருக்கு ஏற்ற வகையில் தாழ்வாக இருக்கவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.