tamilnadu

img

சட்ட வரையறையை மீறலாமா உயர்நீதிமன்றம்? - உ. வாசுகி

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு

உடல் உறுப்பில் காயங்கள் இல்லை என்பதை வைத்து மட்டும் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்கிற முடிவுக்கு வர முடியாது. இந்தப் பார்வை ‘அரதப் பழசு’. 

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ள கருத்துக்கள், குறிப்பாக, “நடந்தது கொலையோ வல்லுறவோ அல்ல” என்பவை, துரதிர்ஷ்டவசமானவை. பிணை வழங்கும் போது ஒட்டுமொத்த வழக்கின் தகுதிக்குள் போகக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இத்தீர்ப்பு  பொருந்துவதாகத் தெரியவில்லை.  பிணைக்கான தீர்ப்பு என்ற பெயரில் வழக்கையே காலி செய்தது (quash) போலத் தோன்றுகிறது.  இவர்கள் குற்ற வாளிகளே இல்லை என்கிற முடிவுக்கு நீதி மன்றம் வந்தால் எதற்காக நிபந்தனை ஜாமீன் அளிக்க வேண்டும், எதற்காக சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என்கிற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

பிணைக்கான உத்தரவு என்பது, குற்றம் சாட்டப்பட்டவர்  வெளியே விடப்பட்டால் சாட்சிகளை கலைத்து விடுவாரா, தடயங்களை அழித்து விடுவாரா, தப்பி ஓடி விடுவாரா, காவலில் இருந்து தான் ஆக வேண்டுமா, குற்றத்தின் தன்மை என்ன போன்ற அம்சங்களைத் தான் பொதுவாக கணக்கில் எடுக்கும். ஆனால் பிணை நீதிமன்றத்தின் வரம்பையும், மனு போட்டவர்கள் கேட்ட  நிவாரணத்தையும்   தாண்டியதாக இந்த உத்தரவு உள்ளது. விசாரணை முகமை மற்றும் வழக்கு நடத்தும் கீழமை நீதிமன்றத்தின் அதிகார  வரம்புக்குள் தலையிடுவதாக உள்ளது.  இதன் மூலம் சிபிசிஐடி  விசாரணை யையும், வழக்கு நடத்தும் கீழமை நீதிமன்ற நீதிபதியின் கருத்தையும் இது  பெருமளவு பாதிக்கும்; வழக்கின் போக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக  திசை திருப்பக் கூடும் என்கிற அச்சமும் எழுகிறது.

உடற்கூராய்வு

இந்த உத்தரவின் சில அம்சங்களைப்  பார்த்தால்,  பல்வேறு  முடிவுகளுக்கு வருவதற்கு நீதிமன்றம், உடற்கூராய்வு அறிக்கைகளை அதிகம் சார்ந்தி ருப்பதாகத்  தெரிகிறது. உடற்கூராய்வு அறிக்கை ஓர் ஆவணம்; அது உடலின் நிலை குறித்த அம்சங்களை, காயங்கள், அறிகுறிகள் போன்ற  விபரங்களை மட்டுமே முன் வைக்கும்.  ரசாயன பரிசோதனைக்கு பின்னரே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.    வழக்கு  நடக்கும் போது தான் அறிக்கையை  எப்படி வியாக்கியானம் (interpretation) செய்வது - அதாவது காயங்கள், ரசாயன மாற்றங்கள் எப்படி  எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும் உள்ளிட்ட வை முன்னுக்கு வரும்.  விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும். 

‘மதுராவுக்கு கிடைத்த மனுநீதி’

உடற் கூராய்வு அறிக்கை, வல்லுறவு நடந்ததா இல்லையா என்று கூறாது. உடல்  குறித்த விவரங்களை மட்டுமே குறிப்பிடும் என்பதோடு, குறிப்பிட்ட உடல்  உறுப்பில் காயங்கள் இல்லை என்பதை வைத்து மட்டும் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்கிற முடிவுக்கு வர முடியாது. இந்தப் பார்வை ‘அரதப் பழசு’.  1972ல் 16 வயது பழங்குடியினப் பெண்  காவல் நிலையத்தில்  வல்லுறவு  செய்யப்பட்ட வழக்கில் 1979ல் குற்ற வாளிகளை விடுவித்து  தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் முன்வைத்த காரணங்களில் ஒன்று, உடலில் காயங்கள் இல்லை என்பது. எதிர்த்துப் போராடி இருந்தால் பெண்ணின் உடலில் காயங்கள் இருக்கும்; காயங்கள் இல்லை என்றால் எதிர்த்திருக்க மாட்டார்; அப்படியானால் விருப்பத்துடன் உடன்பட்டு இருப்பார் என்பதுதான் இதன் பொருள். 

இது உள்ளிட்ட  தீர்ப்பின் பல்வேறு அம்சங்களை எதிர்த்து 4  சட்டப்பேராசிரியர்கள் உச்சநீதி மன்றத்திற்கு கடிதம் எழுதினார்கள். பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள் வலுவான போராட்டத்தை நாடு முழுவதும் நடத் தின. வல்லுறவுக்கு எதிரான பல பெண்கள் குழுக்கள், மேடை கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ‘மதுராவுக்கு கிடைத்த மனுநீதி’ என்கிற தலைப்பில் சிறு பிரசுரம் வெளியிட்டு பிரச்சா ரம் செய்யப்பட்டது.  

பாலியல் வல்லுறவு மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்வினை குறித்து சமூகத்தில் ஆணாதிக்கப் பார்வையோடு கூடிய கற்பிதம் நிலவுகிறது. பெண், குற்றம் நடந்து எத்தனை நாள் ஆனாலும் அழுது அரற்றி கொண்டி ருக்க வேண்டும், மூலையில் முடங்கி உட்கார வேண்டும்,  இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் அப்படித்தான் உடை உடுத்த வேண்டும் என்ற  எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை சில சமயம்  தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கின்றன. உதார ணமாக, கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணை அளித்த வழக்கில் சம்பந்தப் பட்ட பெண் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய உடை உடுத்தியிருந்தார் என்பதாக - குற்றவாளிக்கு சாதகமான ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. 2020ல் கர்நாடக உயர் நீதிமன்றம் பாலியல் வல்லுறவு குற்றவாளி ஒருவருக்கு பிணை கொடுக்கும் போது, வல்லுறவுக்குப் பிறகு சோர்வா லும், களைப்பாலும் தூங்கி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சொன்னதை ஆட்சேபித்து, ஒரு இந்தியப் பெண் இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வியை எழுப்பியது. 

போராட்டத்தால் விளைந்த  சட்டமாற்றங்கள்

மதுரா வழக்கை ஒட்டி எழுந்த வெகுஜன நிர்ப்பந்தத்தின் காரணமாக 1983ல் குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத் தங்கள் மூலம் பாலியல் வல்லுறவு தொடர்பான  பல சட்ட மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தேசிய சட்ட ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அளித்து அவை யும் அவ்வப்போது திருத்தங்களாக இணைக்கப்பட்டன. இப்படி கிடைத்தவை தான் பாதுகாவலில் நடக்கும் குற்றங்க ளில் (custodial crimes) குற்றம் செய்யவில்லை என்று  குற்றவாளிகள் தான் நிரூபிக்க வேண்டும்; வல்லுறவுக்கு உடலில் காயங்கள் இருந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியம் இல்லை; தான் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட தாக  பாதிக்கப்பட்ட பெண் சொன்னால்  அதை அனுமானமாக வைத்துக் கொள்ள வேண்டும்; வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது; 18 வயதுக்கு கீழான சிறுமி என்றால் அவளது சம்மதம் கிடைத் ததா இல்லையா என்பதே தேவையில்லை; பாதிக்கப்பட்ட பெண்ணின் கடந்த கால பாலியல் தொடர்புகள் குறித்த கேள்விகள் கேட்கப்படக்கூடாது போன்றவையாகும். 

போக்சோ சட்டம்

2012ல் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டம் நான்கு வித மான பாலியல் வன்முறையை சட்டப்பிரிவுகளாக முன் வைக்கிறது. அவை பாலியல் தாக்குதல், தீவிரமான பாலியல் தாக்குதல், வல்லுறவு (பெனிட்ரேட்டிவ்) பாலியல் தாக்குதல், தீவிர வல்லுறவு (தீவிர பெனிட்ரேட்டிவ்) பாலியல் தாக்குதல் ஆகும். பெண்ணின் உடலில் சில பகுதிகளைத் தொட்டாலே பாலியல் தாக்குதல் தான் என்பது உள்ளிட்ட விரிவான விளக்கம் போக்சோ சட்டப்பிரிவுகளில் அளிக்கப் பட்டிருக்கிறது.  கள்ளக்குறிச்சியில் மரணம் அடைந்த பெண் 18 வயதுக்கு கீழானவர் என்கிற அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவு கள் பொருந்தும். இவை எல்லாமே விசாரணை, ஆதாரங் கள், தடயங்கள் இவற்றைப் பொறுத்து நிரூபிக்கப்படும். விசா ரணையில் கிடைக்கும் விவரங்களை வைத்து குற்றப்பத்தி ரிக்கை மேலும் புதிய பிரிவுகளோடு தயாரிக்கப்படும்.  மற்றோர் உதாரணம், மார்பகப் பகுதியில் ஏற்பட்ட காயங் கள் குறித்ததாகும். காயங்கள் உள்ளன என்பதை மட்டுமே கூராய்வு அறிக்கை சொல்ல முடியும். அவை, பாலியல் தாக்கு தலினால் ஏற்பட்டவையா அல்லது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் போது அங்கிருந்த கல்துகள்க ளால் ஏற்பட்டவையா என்பது வழக்கு விசாரணையின் போது முன் வைக்கப்படும் ஆதாரங்கள், வாதங்களைப் பொறுத்து தான் தெளிவாகும். அதேபோல் ரத்தக் கறையல்ல சிவப்பு பெயிண்ட் என்பதும், மாணவியின் தற்கொலை கடிதம் என சொல்லப்படுவதில் உள்ள கையெழுத்து அவருடையது தான் என்பதும்  நிபுணர்கள் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி, குறுக்கு விசாரணையை சந்தித்து இறுதியில் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எந்த நிபுணர் சொன்னார் என்று தெரியவில்லை; அப்படியே இருந்தாலும், “நிபுணர் சொன்னார்” என்பது மட்டுமே முடிந்த முடிவாகி விடாது. 

மேல் முறையீடு தேவை

இவ்வழக்கு சம்பந்தமான சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றோர் உத்தரவில், ‘விசாரணை முடிவடையும்போது புகார் கொடுத்தவரே குற்றவாளியாகும் சூழலை சில சமயம் பார்த்தி ருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருப்பது, பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிற பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. ஏற்கனவே ஏராளமான அழுத் தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பெற்றோர் சந்தித்துக் கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சிபிசிஐடி யின் எச்சரிக்கை போன்றவற்றைப் பார்க்கும் போது இவ் வழக்கு குறித்து யாரும் எதுவும் வாய் திறந்தே பேசக் கூடாது என்கிற தொனி தான் தெரிகிறது.  தமிழக அரசு, பிணைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதி மன்றம் ஒட்டுமொத்த வழக்கின் தகுதி குறித்த ஆய்வுக்குள் சென்றிருப்பதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் உடன டியாக மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும். ஜனநாயக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இதன் ஆபத்தான விளைவுகள் குறித்து   உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும்.