tamilnadu

ஸ்மார்ட்சிட்டி பணிகள் நிறைவடைவது எப்போது? அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை:
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நான்கு சித்திரை வீதிகளில்நடைபெற்று வரும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு செய்தார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி மக்களவை உறுப்பினர் இரவீந்திரநாத், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் தமிழகஅமைச்சர்கள் பங்கேற்ற மதுரை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஸ்மார்ட்சிட்டி பணிகளில் ஒன்றுமட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது என்று  சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கண்காணிக்க மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கண்காணிப்புக்குழுவின் மேற்பார்வையில் அவர்களது ஆலோசனையில் பணிகள் நடைபெறவேண்டுமென மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். ஸ்மார்ட் சிட்டி பணிகளை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனும் கண்காணித்து தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.57கோடி மதிப்பில் மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும்பணிகள், மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கும் பணிகள், அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளை ஆணையாளர் ச.விசாகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு  செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எட்டு பணிகள் ரூ.977கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் குன்னத்தூர் சத்திரத்தில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகளைமாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. பெரியார் பேருந்து நிலையம் விரிவாக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது  அதன் அருகில் சுற்றுலா தகவல் மையம் கட்டுமான பணிகளும், நவீனஅங்காடி மையமும் ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  

ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் ரயில்வே நிலையம் முதல் திருமலைநாயக்கர் மஹால் வரை அலங்கார விளக்குகள், பாரம்பரிய நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துவதற்காக கரையின் இருபுறங்களில் இருவழிச் சாலையாக மாற்றும் பணிகள், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளின்பழைமை மாறாமல், புராதனம், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில்  நான்கு சித்திரை வீதிகளில் ரூ.8.57கோடி மதிப்பீட்டில் கருங்கற்கள்  பதிக்கும் பணிகள்நடைபெறுகிறது. இந்த வீதிகளில் சுற்றுலாப் பயணிகளின் அலங்கார விளக்குகள் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது.  தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. டிசம்பர் 2020-க்குள் நான்கு சித்திரைவீதிகளில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்.  மழைநீர் கோவிலுக்குள் செல்லாத அளவிற்கு 30மீட்டர் மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் நேரடியாக வைகை ஆற்றில் செல்வதற்குபாண்டியர் மன்னர்கள் காலத்தில் இருந்த மழைநீர்வடிகால் முறையை செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்திரை வீதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகர்கள் மற்றும் வர்த்தகம் பாதிக்காத வகையில் ஆவணி மூலவீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள், வெளி வீதிகளில்நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின் இதர பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றார்.