உணவை உண்ணும் போது
உமிழ்நீர் சேர வேண்டும்!
மென்று விழுங்க வேண்டும்
மிகவும் செரிக்கத் தூண்டும்!
சுவைத்து காய்கனி உண்பாய்
சோற்றினும் உயர்வது காண்பாய்!
எவையும் விரும்பி உண்பாய்
ஏராள நன்மை காண்பாய்!
வெங்காயம் பூண்டைத் தள்ளாதே
வெறுப்பு அதன்மேல் கொள்ளாதே!
எங்கும் மணக்கும் பெருங்காயம்
ஏற்பதே சுவையின் நியாயம்!
மீனுடன் இறைச்சிக் கருவாடு
மிகவும் நல்லது நீதேடு!
தேனுடன் பாலும் அருந்திடு
தெரியும் பயனதில் புரிந்திடு!
முட்டை நல்ல உணவாகும்
முறையாய்ப் பலவகைப் பயனாகும்!
கெட்ட நோய்கள் அண்டாமல்
கேட்டினைத் தவிர்ப்பது உணவாகும்!
கண்டதை வாங்கி உண்ணாதே
கடும்நோய் வந்திடும் அதனாலே!
பண்டத்தில் நல்லதைத் தேர்ந்தெடு
பரவும் நோயதை வென்றிடு!
உணவே மருந்தாய் கொண்டிடு
உறுதியாய் அதனை வென்றெடு!
எண்ணரும் இயற்கை வளங்க ளெல்லாம்
ஏற்றிடும் உயிரே இனிக்கும் என்றாடு!