திருப்பூர், பிப்.1- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து என்னத்தச் சொல்ல? என்று திருப்பூர் தொழில் துறையினர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். ஓரிரண்டு அமைப்புகள் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று பொதுவாக வரவேற்புத் தெரிவித்தாலும், குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை என்று கூறினர். பருத்தி நூல் விலை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலையேற்றம், அதை கட்டுப்படுத்துவது பற்றி இந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படாதது பற்றியும் வேதனை தெரிவித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம் கூறியதாவது: வேளாண்மைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பின்னலாடை தொழில் இருந்து வருகிறது. இதற்கென தனியாக வாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இல்லை. இது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இருப்பினும் பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான சில மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற ஜேக்கட் ஆடைகளுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவசர கடன் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக கூடுதலாக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறாத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலரும் பயன்பெறுவார்கள் என்றார். தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத் (சைமா) தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்த நிலைக்கு தொழில்களை சீராக்க திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கான சலுகை மற்றும் கடன் வசதி நீட்டிப்பு செய்துள்ளதை வரவேற்கிறோம். வருமான வரி அறிக்கையை திருத்தம் செய்து கொள்ள 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்துள்ளது புதிய அம்சமாக உள்ளது. அதே சமயம் இந்த பட்ஜெட்டில் குறிப்பாக பின்னலாடை தொழிலுக்கு ஆதரவோ, ஊக்கமோ கொடுக்கும் அளவில் எந்தவித அறிவிப்பும் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. உயர்ந்து வரும் பின்னலாடை நூல் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
எனவே நூல் விலையை குறைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடைத் தொழில் நூல் விலை உயர்வு மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பின்னலாடைத் தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் பட்ஜெட்டில் பின்னலாடை தொழில் குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கிறது. பெயரளவிற்கு ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் இந்த பட்ஜெட்டால் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படாது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றார். திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டை அதிகமாக எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு ஜவுளித்துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இதுபோல் தனிநபர் வருமான வரியிலும் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பும் ஏமாற்றம் அளிக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கான கடன் திட்டம் அடுத்த ஆண்டு வரை நீட்டித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. என்றார்.