ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி தெளிவான முடிவெடுத்து, வேட்பாளர் அறிவித்து வேலைகள் தொடங்கியிருக்கிறது. ஆனால், எதிர் தரப்போ தங்கள் கூட்டணியில் யார் நிற்பது என்கிற முடிவுக்கு வருவதற்கே பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், ஜனவரி 23 அன்று எழும்பூரில் ஒரு தனியார் ஹோட்டலில் ஓ.பி.எஸ்., தனது தரப்பு மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்திருக்கிறது. 87 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் 114 பேர் என சுமார் 200 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., “அதிமுகவின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரப்படி சட்ட விதிகளின்படி நடந்த தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆக, நான் மட்டும்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். எனவே, அதிமுக என்பது நாம்தான். நாம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி” என்று பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டி போடுவதால், பன்னீர் செல்வம் தரப்பும் போட்டியிடும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அதிமுக மோதல் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. இது ஒருபுறம் இருக்க, பா.ஜ.க நின்றால் ஓ.பி.எஸ் விலகுவதாக சொல்லியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார் என்பதும் தெரியவில்லை. இப்போது இரண்டு கோஷ்டியுமே பாஜக வழிகாட்டுதலில் இருக்கிறார்கள். அதேநேரத்தில் எடப்பாடி தரப்பிலேயே பாஜக எதிர்ப்பு அணி, ஆதரவு அணி என்றிருக்கிறது. மற்றொருபுறம், கடந்த ஓராண்டுக்காலமாக தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருவேளை பாஜக நின்று, எடப்பாடி இரண்டாவதாகவும், பாஜக அதற்குப் பின்னாலும் வந்தால் கடந்த ஓராண்டாக அண்ணாமலை பேசிய இமேஜ் எல்லாம் உடைந்துபோகும்.
எனவே, பாஜக இப்போது எல்லோரையும் ‘ஒன்றுசேர்த்து’ வைத்துவிட்டு ஆதரவு தருவது; இருவரையும் போட்டி போட வைத்து வேடிக்கைப் பார்ப்பது; நீங்கள் இருவரும் வேண்டாம் என்னை ஆதரியுங்கள் என்று சொல்வது; நீங்களும் நில்லுங்கள், நானும் நிற்கிறேன் என்பது... என எந்த முடிவை எடுக்கப் போகிறதோ?