சுரண்டப்படும் வர்க்கம், ஒடுக்கப்படும் சமூகம் இந்த இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழை பழங்குடி இளைஞன் மீது நிகழ்த்தப்படும் அரச வன்முறையை, அதற்கு எதிரான போராட்டத்தை ஜெய்பீம் சித்தரித்துள்ளது. சட்டப் போராட்டம் பிரதானமாக சித்தரிக்கப்பட்டாலும், களப்போராட்டமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜாகண்ணுவின் இணையர், மார்க்ஸ்ட் கட்சி, உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்காடிய வழக்கறிஞர் சந்துரு ஆகியோரின் பங்களிப்பை பதிவு செய்கிறது. சாதிய ஆதிக்க சக்திகளின் இறுமாப்பு, அதிகார வர்க்கத்தின் சித்தரவதைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாப்பாத்திரத்தை கச்சிதமாக சூர்யா செய்துள்ளார்.
சூர்யாவிடம் தேவையற்ற ஒரு அசைவு கூட இல்லை. வசனத்தை விட அவரது பார்வை, உடல்மொழி பேசியது. மணிகண்டன், லிஜோமோல் ஜோன்ஸ் தமிழரசன் உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காழ்ப்புணர்ச்சியோடு படம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. “நடந்து செல்லும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையென்றால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள்” என்றார் சேகுவேரா. இலக்கை நோக்கி நடக்கும் பாதையில் கற்களும், முட்களும் இருக்கும். அவற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். திரைப்படம், அழவைப்பதோடு, அநீதியை எதிர்த்து களமாட தூண்டுகிறது. பழங்குடியின இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான சித்ரவதைகளைக் கண்டு அடிவயிற்றில் கனன்றெழும் நெருப்பை திரைப்படம் விசிறி விடுகிறது. காவல்துறை அடியை, சித்ரவதையை சந்திக்காதவர்கள், அதை அனுபவித்தவர்கள் சொல்வதை கூட கேட்காதவர்கள் லாக்அப் சித்ரவதையை அதீதமாகக் காட்டியிருப்பதாக விமர்சிக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசுகள், சமூக விரோதிகளின் வன்முறையைத் தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுக்கு தெரியும் இது அதீதமல்ல என்று. படம் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிக்கிறார்கள்.
முதலாளித்துவத்தை, பெண்ணடிமைத்தனத்தை, பிற்போக்குத்தனத்தை, சாதியத்தை திரைப்படங்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றால் ஒடுக்கப்படும் மக்கள் குறித்து ஏன் செய்யக்கூடாது? கம்மாபுரத்தில் நடந்தது தனி நபர் சாகசம் அல்ல. கூட்டு முயற்சியின் வெற்றி என்பதை திரைப்படம் பதிவு செய்கிறது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் போராடியது. படத்தை பாராட்டுகிறவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பை பற்றி பேசாமல் செல்வதன் நுண் அரசியல் என்ன?
இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஓர் அநீதியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து கேள்விக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மலர் கிரீடங்களை எதிர்பார்த்து நாங்கள் தலையிடுவது கிடையாது... பாதிக்கப்பட்டவர்கள் போராளிகளாக மாறும் ரசவாதம்தான் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம். செங்கொடியை படத்தில் பார்க்கும் போது உள்ளம் பூரிக்கிறது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்த செங்கொடி உலகப்பார்வைக்கு சென்றுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ள சூழலில் இந்த காட்சி அமைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூக அநீதியை தட்டிக்கேட்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. சாதிய சுவர்களை வீழ்த்துகிற, உழைக்கும் மக்கள்தான் உலகத்தின் உயிர் நாடி என்பதை அண்மைக்கால தமிழ் திரைப்படங்கள் உரத்து சொல்லி வருகின்றன. சாதி, போதை, மதவெறி, வன்முறை, பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க அவரவர் தளங்களில் தொடர்ந்து போராடுவோம்.