தேனி, ஏப்.29- தமிழக முதலமைச்ச ராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக தேனிக்கு வரு கை தரும் மு.க.ஸ்டாலின், 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். தேனி அன்னஞ்சி விலக்கு அருகே புறவழிச்சாலை அருகில் ஏப்ரல் 30 (சனிக்கிழமை யன்று) காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மாவட்டத்தில் முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்கின்றனர். விழாவிற்காக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமை யில் மதுரை ஐ.ஜி.அஷ்ரா கார்க், 2 போலீஸ் டி.ஐ.ஜி., 7 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் விழாவிற்காக முதல்வர் தங்குவதற்கு வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை தயார் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேனியில் விழா மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் முரளிதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், கே.எஸ்.சரவணக்குமார், மகாராஜன், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.