“இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்” பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இளங்கலை மாணவ, மாணவிகள் 299 பேர், முதுகலை மாணவ, மாணவிகள் 17 பேர் என மொத்தம் 316 பேருக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் அவர் பேசும்போது, தமிழகத்தில் என்றைக்கும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். இந்தியை திணிப்பதை ஏற்க மாட்டோம். அண்ணா வழி காட்டினார், கலைஞர் காப்பாற்றினார். மு.க.ஸ்டாலின் கட்டிக் காக்கிறார். இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என ஒன்றிய அரசு நம்மை அச்சுறுத்துகிறது. தமிழக முதல்வர் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம். இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவுபடுத்தி விட்டார். நீங்கள் பெற்ற உங்கள் கல்வி, நாட்டுக்கும், வீட்டிற்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஒரு தேசம் முன்னேறும், ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது கிராமப்புற மக்களின் கல்வியை அழிக்கும் செயலாகும். கலைஞர் ரத்து செய்த நுழைவுத் தேர்வை மீண்டும் ஒன்றிய அரசு கொண்டுவர துடிக்கிறது. உங்களுடைய கல்வி வீட்டிற்கும், நாட்டுக்கும் பயன்படக்கூடியதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது, திராவிட இயக்கம், நீதிக்கட்சி. இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் எனத் தெரிவித்தார். விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.அசோக்குமார் (பேராவூரணி), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ரோசி, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.