பினராயி விஜயன் போன்ற நேர்மையான தலைவர்களையே ஆதரிக்க வேண்டும்!
ஆவணப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசன் பேச்சு
திருவனந்தபுரம், மே 30 - “அநீதிக்கு எதிராகப் போராடுவது, ஒரு வேலை அல்ல; அது ஒரு கடமை!” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பினராயி விஜயன் போன்ற நேர்மையான தலைவர்களை எப்போதும் ஆதரிக்குமாறு மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். கேரள தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட “பினராய் தி லெஜண்ட்” ஆவணப்படத்தை வெளியிட்டு, கமல்ஹாசன் பேசினார். அப்போது, “சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், நாம் அனைவரும் பொதுச்சேவையில் தோழர் பினராயி விஜயன் போன்ற ஒரு தலைவரைப் பெற்றதில் பெருமைப்படலாம்” என்ற கமல்ஹாசன், “கேரளம் பினராயி விஜயன் விரும்பும் விதத்தில் வளர வேண்டும்” என்ற விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார். “இது என்னுடைய கேரளாவும் கூட... என்று சிறு வயதிலிருந்தே என்னை நம்ப வைத்த மலையாளிகளுக்கு நன்றி” என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மலையாளத்தில் தனது உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழ்நாட்டில் உள்ள மக்களும் தான் சொல்வதைக் கேட்க விரும்புவதால் உரையை தமிழுக்கு மாற்றுவதாகவும் கூறி தமிழில் பேசினார்.