உட்கோட்டையில் அரசு பேருந்து இயக்கக்கோரி கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஏப்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, உட்கோட்டை கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் கா. சுந்தர் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், சமூக ஆர்வலரும், ஆசிரியருமான திருவள்ளுவன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர். இது பற்றி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடமும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க கண்ணனிடமும் மனு அளித்தும், இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, நமது பகுதி போக்குவரத்து துறை அமைச்சர் இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உட்கோட்டை வழிதடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் பேருந்தைகளை மீண்டும் இயக்க வேண்டும். மாளிகை மேட்டில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் சேகர் நன்றி கூறினார்.