சென்னை,டிச.29 – தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் வெள்ளியன்று (டிச.29) கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக தனியார் மருத்துவமனையில் வியாழனன்று (டிச.28) காலமானார். அவரது உடல் மருத்துவ மனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு அஞ்சலி செலுத்த முடியாமல் கூட்டத்தின் இடிபாடுகளில் சிக்கினர். கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வெள்ளிக்கிழமையன்று (டிச.29) காலை 6 மணிக்கு விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நெரிசலின்றி வந்து செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து நெரிசலின்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் இதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி அளவில் தீவுத் திடலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. சுமார் 5 கி.மீ. தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரமானது. வழிநெடுகிலும் இருபுறமும் சாலைகளில் மக்கள் திரண்டு நின்றும், வீடு, அலுவலகங்களின் மாடிகளில் இருந்தும் விஜயகாந்திற்கு விடைகொடுத்தனர். 6 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு உடல் வந்தடைந்தது. அங்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சார்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்மலா சீதாராமன்-உதயநிதி அஞ்சலி முன்னதாக தீவுதிடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம்தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி., முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநகராட்சி மேயர் பிரியா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான், தாமக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல் அஞ்சலி விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், தாமு, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த், ராம்கி, ராதா ரவி, சாந்தனு, வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், மிஷ்கின், சுந்தர் சி, பா. ரஞ்சித், பாடகர்கள் மனோ, வேல்முருகன், நடிகைகள் ரோகிணி, சுகன்யா, குஷ்பு, நிரோஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித் குமார் அஜர்பைஜானில் இருந்ததால் தொலைபேசி வாயிலாக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். மாநகராட்சியில் தீர்மானம் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி இல்லாத நிலையில், வெள்ளியன்று (டிச.29) நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.