சென்னை, நவ. 3 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யையும், வேதாந்தா நிறுவனத்தையும் விசாரணைக்குள் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று அதிமுக ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 14 பேர் மாண்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நீதி பதி அருணா ஜெகதீசன் ஆணையத் தின் அறிக்கையை முன்வைத்து புதனன்று (நவ.2) சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆணையத்தின் அறிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்த கே.பாலகிருஷ்ணன், “அரசு சொல்வதை வழிமொழிவதாக விசாரணை ஆணைய அறிக்கைகள் இருக்கும். அதிலிருந்து மாறுபட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை உள்ளது. வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனத்தை பாது காக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்தின” என்றார். “வேதாந்தா நிறுவனத்திட மிருந்து ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய பண பரிமாற்றம் நடந்துள்ளது. நீதிமன்றம் வரை கார்ப்பரேட்களின் ஆதிக்கம் நீண்டுள்ளது. கார்ப்பரேட்களின் கைப்பாவையாக அரசு நிர்வாகம் செயல்பட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில், ஒரு பிரச்சனையில், ஒரே இடத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றது இதுதான் முதல்முறை.
இதற்கு காரணமான காவல் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத் துள்ளது. இவர்களோடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச் சாமியையும், இதற்கு பின்புலமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தையும் விசாரணைக்குள் அரசு கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா மல் இருக்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். ஆணையம் பரிந்துரைத்த அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பால கிருஷ்ணன், தொழில்வளர்ச்சி அவ சியமானதுதான். அதற்காக, மனித வாழ்வை அழிக்கும், சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தை தவணை முறை யில் கொலை செய்யும் ஆலைகளை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுப.வீரபாண்டியன்
முடிந்து போகிற நிலையில் இருந்த பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட்டுகள் போராட்டம் நடத்தி உயிர்கொடுத்த னர். ஆணையம் அமைவதற்கும் பின்புலமாக இருந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். அதை தொடர்ந்து கட்சி முன்னெடுத்து செல் கிறது என்றார் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன். இதுமட்டுமல்ல, அண்ணாமலை நகர் (பத்மினி வழக்கு) தொடங்கி, இன்றைக்குள்ள ஆளுநர் பிரச்சனை வரைக்கும் கே.பாலகிருஷ்ணனுக்கு பங்கு உள்ளது. அவர் தொடங்கி வைத்த ஆளுநர் விவகாரம் இப் போது சூடுபிடித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜென்ராம்
மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் , “மக்கள் போராட்டங்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் புதுப்புது வார்த்தைகளை பயன்படுத்தி ஒடுக்குகின்றனர். போராட்டங்க ளுக்கான, ஜனநாயக வெளி சுருங்கி வருகிறது. தூத்துக்குடியில் தடியடி நடந்தபோது நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள், துப்பாக்கி சூடு நடந்தபோது நேரலை செய்யவில்லை. ஜனநாயக வெளி சுருங்கி வருவதை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் பரிதாபகரமான நிலையில் உள்ளன. போராட்டங்களை முழுமையாக வெளிப்படுத்தக் கூடிய நிலையில் இல்லை. இதுபோன்ற பிரச்சனைக ளில் முதன்மையான முரண்பாடு எங்கே, யாரோடு இருக்கிறது என்பதை கூர்மையாக கவனிக்க வேண்டும்” என்றார். “நமக்கு அவசரம் என்பதால் அட்டை பூச்சிகளிடம் ரத்ததானம் கேட்பதா? என 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியை விமர் சித்திருந்தேன். அதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து பரந்த ஐக்கிய முன்னணியை அமைக்க சிபிஎம் முழு முயற்சி எடுக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
என்.குணசேகரன்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், “மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதை ஏற்க முடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஸ்டெர்லைட் நிறுவ னம் அரசு நிர்வாகத்திற்கு ஆணை யிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்க ளின் நலனுக்கு அரசு நிர்வாகம் அடி பணிந்து கைப்பாவையாக செயல் பட்டுள்ளது. கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டத்தை கொண்டு செல்ல, ஆணைய அறிக்கை உதவுகிறது. கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு அரசு நிர்வாகம் அடிபணிந்துள்ளது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கரும்புள்ளி” என்றார்.
ஆர்.வேல்முருகன்
கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி பேசிய கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பிறகுதான், அதிமுக அரசு வேறுவழியின்றி விசா ரணை ஆணையத்தை அமைத்தது” என்றார். கருத்தரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி ,சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.