tamilnadu

வடகாடு சம்பவம்: இரு தரப்பினரையும் அழைத்து சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்குப் பரிந்துரை

வடகாடு சம்பவம்: இரு தரப்பினரையும் அழைத்து  சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்குப் பரிந்துரை

ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் பேட்டி

புதுக்கோட்டை, மே 10-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாட்டில் இரு தரப்பினரையும் அழைத்து சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைப்போம் என்றார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தலைவர் எஸ்.தமிழ்வாணன். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ். தமிழ்வாணன், துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் வி. அண்ணாமலை, உறுப்பினர்கள் எஸ். ஆனந்தராஜா, பி. இளஞ்செழியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை புதுக்கோட்டை வந்தனர். வடகாட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை அவர்கள் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும் வடகாட்டிலும் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வேங்கைவயல் கிராமத்துக்கும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இவற்றையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆணையத் தலைவர் எஸ். தமிழ்வாணன் தலைமை வகித்தார். ஆட்சியர் மு.அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரூ.46 ஆயிரம் இழப்பீடு வடகாடு கிராமத்தில் எரிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் சேகர் மனைவி மல்லிகாவுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.46 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, ஆணையத் தலைவர் எஸ். தமிழ்வாணன் அளித்த பேட்டியில், வடகாடு கிராம மோதலைப் பொருத்தவரை அதிகாரிகள் பிரச்னை வரும் இடத்தில் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக இரு தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைப்போம்.  வீடு கட்டித்தர உறுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எரிக்கப்பட்ட வீட்டுக்குப் பதிலாக, மாவட்ட நிர்வாகம் மற்றொரு வீடு கட்டித் தர வேண்டும் என ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். வடகாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேங்கைவயல் விவகாரம் மிகக் கேவலமானது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைத்தான் கைது செய்துள்ளனர். அவர்கள் நாங்கள் இல்லை என்று கூறினால், நீதிமன்றம் மூலமாக நிவாரணம் தேடிக் கொள்ளலாம். ஜாதி என்பது சமூகத்தில் ஒரு மனநோயாக உள்ளது. சமூகநீதி, சமத்துவம் ஆகியவை முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு சிறிது காலமாகும். ஆணையம் பரிந்துரை செய்துதான், காலனி என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார் என்றார்.