சென்னை, ஜன. 21 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜன.24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவும் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று பரவல் மூன்றாவது அலை உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது. தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் வெள்ளியன்று (ஜன. 21) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 17 விழுக்காடு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில், 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். கால அவகாசம் ஜன.27ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்று வாதிடப்பட்டது. இந்த காணொலி காட்சி விசாரணையின் போது தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதால் வழக்கை நேரடியாக விசாரிக்க வேண்டும் என மருத்துவர் நக்கீரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு மட்டும் நேரடியாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இடைப்பட்ட காலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடாத வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் விடப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஜன.24 ஆம் தேதி நேரடி விசாரணையின் போது வழக்கு தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.