பாரிஸ், பிப்.6- பல்வேறு நாடுகளுக்கிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு களால் உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் பிளவுபட்டு நிற்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போவதாகவும், அந்நாட்டின் எல்லையில் ஏராளமான ராணுவத்தினரை ரஷ்யா குவித்திருப்பதாகவும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கூட்டாளி கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அமெரிக்காவும், பிரிட்டனும் உக்ரைன் தலையில் ஆயுதங்களைச் சுமத்தி பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் வாங்கிக் குவித்துள்ளது. ரஷ்ய அச்சுறுத்தல் என்ற அமெரிக்காவின் பிரச்சாரத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் நம்பவில்லை. அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் ரஷ்ய அச்சுறுத்தல் என்று தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. செயற்கைக் கோள் மூலமாக எடுத்த படம் என்று ஒன்றைத் தொடர்ந்து காட்டி, ரஷ்யா படைகளைக் குவித்து வருகிறது என்று செய்திகளோடு இணைத்து ஒளிபரப்புகிறார்கள். இதன் நம்பகத்தன்மை குறித்த கேள்வி களுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு நாளும், அமெரிக்காவின் பொய்ப்பிரச்சாரம் புதிய பரிமாணங்களை எடுக்கிறது. உக்ரைன் மீது படையெடுக்கத் திட்டம் எதுவுமில்லை என்று ரஷ்யா சொன்னாலும், மூன்று திசைகளில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தப் போகிறது என்று அமெரிக்கா சொல்கிறது. ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக எல்லைப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரம் செய்கிறது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஐரோப்பியாவில் எந்தவித போர் ஏற்படுவதையும், அமைதி குலைவதையும் அந்நாடுகள் விரும்பவில்லை. இதே கருத்தினை மேலும் சில நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமைதி யை விரும்புவதால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரச்சாரத்தை சில ஐரோப்பிய நாடுகள் நம்ப மறுத்து வருகின்றன.