tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 16-  மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியக்குழு சார்பில், இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் கல்லகம் பேருந்து நிலையத்தில் துவங்கியது. ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.  கல்லகம், கீழரசூர், மால்வாய் ரோடு, வடுகர் பேட்டை, கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கல்லக்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை விளக்கி பேசினர்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிகாந்த், தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நல குழுவின் புறநகர் மாவட்டச் செயலாளர் அலெக்ஸ், மாவட்ட தலைவர் எம்.கே. தங்கராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்லதுரை, குமார், பழனிசாமி, ஜார்ஜ், மூத்த தோழர் யோகராஜ், மாதர் சங்க தலைவர்கள் கல்லகம் மல்லிகா, அமுதா உட்பட கிளைச் செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சிபிஎம் அகில இந்திய  மாநாட்டு தீர்மான  விளக்க பேரவை

திருச்சிராப்பள்ளி, ஜுன் 16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீர்மான விளக்க பேரவை கூட்டம் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்ட குழுவின் சார்பில் ம. கல்லுபட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலாளர். நாகராசன் தலைமை வகித்தார். மாநாட்டு தீர்மானத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், உடனடி வேலைகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகராசன் விளக்கவுரையாற்றினர். கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் ரசீதும் வழங்கப்பட்டது. வட்டக் குழு  உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்  புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

தஞ்சாவூர், ஜுன் 16-   தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பள்ளிகளில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை தேர்வு வைக்கப்பட்டது. இத்தேர்வினை 38 பள்ளிகளில் 1,105 தேர்வர்கள் எழுதினர். இம்மையங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.கே. ராமமூர்த்தி, மனோகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ. முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா. சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பூதலூர் அரசு மருத்துவமனைக்கு  கூடுதல் கட்டட வசதி செய்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜுன் 16-   தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில், ஞாயிற்றுக்கிழமை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு, தஞ்சை செல்லும் வழியில், பூதலூர் நான்கு ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியக் குழுவின் சார்பில், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதில், நிர்வாகிகள் சரவணன், ராஜு, முருகன், ராஜகோபால், கோவிந்தராஜ், முத்துகிருஷ்ணன், கண்ணன், பாலு, ராமலிங்கம், சோலை. தெட்சிணாமூர்த்தி மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.  அதில், பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய 3+1 கட்டிட வசதி செய்து தர வேண்டும் எனவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் - சார்லப்பள்ளி சிறப்பு  விரைவு ரயில் பயண நேரத்தில் மாற்றம்

தஞ்சாவூர், ஜுன் 16-   ராமேஸ்வரம் - சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (07696) ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) இராமேஸ்வரத்தில் இருந்து காலை 9.10மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரயில் நிலையப் பகுதியில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் புறப்படும் நேரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  இதன்படி, ஜுன் 20 மற்றும் 27 (வெள்ளிக்கிழமைகளில்) இராமேஸ்வரம் சார்லப்பள்ளி விரைவு ரயில் இராமேஸ்வரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.  இந்த ரயில் பட்டுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.12 மணிக்கும், திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை காலை 7.04 மணிக்கும், திருப்பதிக்கு சனிக்கிழமை காலை 11.11 மணிக்கும் சென்றடைந்து, சார்லப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குச் சென்றடையும்.  இந்த ரயிலில் செல்லவிருக்கும் ரயில் பயணிகள், இந்த நேர மாற்றத்தை அனுசரித்து பயணம் செய்யுமாறு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.