tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கோல்டன் கார்டு விசாவை அறிமுகம் செய்தார் டிரம்ப்

வாஷிங்டன், ஏப். 4 - அமெரிக்காவில் வெளி நாட்டினர் குடியேறுவதை தடுப்பதற்காக கடந்த மாதம் புதிய விசா கொள்கையை அறிமுகம் செய்தார். அதில் பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமே குடியேறும் வகையில் அவர்கள் மட்டுமே வாங்கும் வகையிலான கோல்டன் கார்டு (தங்க அட்டை) திட்டத்தை அறிவித்தார். இதனடிப்படையில் தற்போது கோல்டன் தங்க அட்டையை பெறுவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் 41.5 கோடிகள்) அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும். அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் அவர்களது குடும்பத்துடன் தங்கி நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு வாங்குவதற்கு இபி-5 என்ற விசா கொடுக்கப்பட்டு வந்தது. இனி அந்த விசாவிற்கு பதிலாக 41.5 கோடிகள் செலுத்தி தங்க அட்டையை  பெற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். “ட்ரம்ப் கார்டு” என்று அழைக்கப்படும் தங்க அட்டையில், டிரம்ப் மற்றும் சுதந்திர தேவி சிலையின் படங்கள் இடம்பெற்றுள்ளன, அதில் “தி ட்ரம்ப் கார்டு”  என்றும்  அச்சிடப்பட்டுள்ளது. இந்த அட்டையை விரும்புபவர்கள் இரண்டு வாரங்களில் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இலங்கை பயணம்

பாங்காக், ஏப்.4 - பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற மோடி அண்டை நாடுகளான  வங்கதேசம் மற்றும் இலங்கைக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. தாய்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, சுற்றுலா, விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

 யூனுஸ் - மோடி சந்திப்பு

வெள்ளிக்கிழமையன்று இம்மாநாட்டில் வங்கதேச நாட்டின் தலைமை ஆலோசகர் யூனுஸ் உடன் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  சில நாட்களுக்கு முன் சீனா சென்றிருந்த யூனுஸ் இந்தியா பற்றி தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மோடியின் சந்திப்பு முக்கிய விசயமாக கருதப்படுகின்றது. மேலும் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற பிறகு இந்திய பிரதமர் முதல் முறையாக யூனுசை சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்புக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு மோடி இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு துறை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.