tamilnadu

img

திருச்சி பெல் சிஐடியு சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23- திருச்சி பெல் சிஐடியு தொழிற் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மூத்த தோழருமான பொன்மாலா வியாழனன்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.  தோழர் பொன்மாலா பெல் சிஐடியு சங்கத்தை உருவாக்கி, நிலை நிறுத்துவதில் உறுதியோடு செயல்பட்டவர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாதம் சிறையிலும், ஒரு மாதம் தலைமறைவாகவும் வாழ்ந்துள்ளார். பெல் சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.  தோழர் பொன்மாலா மறைவு செய்தியறிந்து, அவரது உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் பொன்மாலாவிற்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் திருவெறும்பூர் எழில்நகரில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து சனிக்கிழமை (ஜூன் 24) மாலை 4 மணியளவில் புறப்படுகிறது. 

சிஐடியு பொதுச் செயலாளர் இரங்கல்

தோழர் பொன்மாலா அவர்களது மறைவுச் செய்தி அறிந்து சிஐடியு பொதுச் செயலாளரும் பெல் சிஐடியு மத்திய தொழிற்சங்கத் தலைவருமான தபன்சென் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் வெளியிட்டுள்ளார். திருச்சி பெல் சிஐடியு சங்கத்தை கட்டி வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்த தோழர் பொன்மாலா, பெல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சாலை மட்டத்திலும், தேசிய அளவிலும் இதர அனைத்துச் சங்கங்களையும் ஒன்று திரட்டி வலுவான இயக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர் என தபன்சென் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தோழர் பொன்மாலாவின் குடும்பத்தினருக்கும் சக தோழர்களுக்கும் சிஐடியு அகில இந்திய செயற்குழுவின் இதயப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.  தோழர் பொன்மாலா மறைவிற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.