திருச்சிராப்பள்ளி, மார்ச் 24 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் செவ்வாயன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் கர்சன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கை யை மாநில பொருளாளர் வரதராஜன் சமர்ப்பித்தார். கூட்டத்தில் 76 மாத பஞ்சப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அரசே பென்சனை ஏற்று நடத்த வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி 85,000 ஓய்வூதியர்களை அரசு பாதுகாக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் சாலையில் ஏப்ரல் 4 ஆவது வாரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. மாநில துணைத்தலைவர் ஏ.ரைமண்ட், மாநில துணை பொதுச் செயலாளர்கள் ஆர்.தேவராஜ், எம்.சண்முகம், ராமச்சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில துணை பொதுச் செயலாளர் கோவை.செல்வராஜ் வரவேற்றார். முடிவில் மாநில துணைச் செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.