தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
புதுக்கோட்டை, ஏப்.27- மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், மே 20 அன்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்காக போராட்ட ஆயத்த மாநாடு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி, பேரவை செயலாளர் எம். வேலுச்சாமி, சிஐடியு மாநில செயலாளர் எஸ். தேவமணி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் வி.முத்துச்சாமி, ஆர்.திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். தொமுச மாவட்டப் பொருளாளர் எஸ். மணிமொழியன், சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் உ. அரசப்பன், தொமுச மாவட்ட துணைத் தலைவர் பி.சண்முகம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.