tamilnadu

img

உதகை ரோஜா பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

உதகை, மார்ச் 20- உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். உதகைக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். இதனால், எப்போதும் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் காணப்படும். தற்போது, கோடை சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பூங்கா முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தாவரவியல் பூங்கா மலர்கள் இன்றி காட்சியளிப்பதால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேசமயம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக ரோஜா பூங்காவில் முதல் பாத்திகள் மற்றும் மூன்றாவது பாத்திகளில் மலர்கள் பூக்கும் வகையில், முன்னதாகவே கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த பாத்திகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வகையான ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். தாவரவியல் பூங்கா மற்றும் இதர பூங்காக்களில் மலர்களே இல்லாத நிலையில், ரோஜா பூங்காவில் பூத்துள்ள மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.