tamilnadu

இன்று உலக மகளிர் தினம் : சிபிஎம் வாழ்த்து

சென்னை, மார்ச் 7 -
உலக மகளிர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
மார்ச் 8ம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பர்யமும் உண்டு.  இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தின வாழ்த்துக்களை தமிழகம் முழுவதும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்து போராடும் அத்தனை போராளிகளுக்கும் உரித்தாக்கிக் கொள்கிறது.

தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள், வாழ்வாதாரம், பாலின சமத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்காக  மகத்தான போராட்டங்கள், பொது வேலை நிறுத்தங்கள்,  விவசாய/விவசாய தொழிலாளர் போராட்டங்கள், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார பாதிப்பு, கடுமையான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார் மயம் போன்றவற்றின் தாக்குதலுக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.  பெருந்தொற்று  காலத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலையை இழந்துள்ளனர். பல நிறுவனங்களில்  கேம்ப் கூலிகளாக இளம் பெண்கள் அவதியுறுகின்றனர். நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மாற்றுத்திறனாளி பெண்களும் பல்வேறு பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொள்ளாச்சியில் நடந்தது போன்ற பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு மாவட்டங்களில் முன்னுக்கு வருகின்றன.

இணைய தளக்குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சங்பரிவாரங்களின் பெண்ணடிமைத்தன கருத்தியல் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகளில் சாதிய, மதவாத கோணங்கள் அதிகம் முன்னுக்கு வருகின்றன. நீதி வழங்கும் இடங்களில் இருப்பவர்களில் ஒரு பகுதி இத்தகைய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.
ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.  

குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான மற்றும் சாதி ஆணவக் குற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான முயற்சிகளை, போராட்டங்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும். 

பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் இதற்காக நடத்தும் இயக்கங்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும். சாதி, மதம் கடந்து நின்று, சமத்துவத்திற்கான போராட்டங்களில் வலுவான பங்காற்ற தமிழகப்பெண்களை, உலகப்பெண்கள் தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.