tamilnadu

img

கடல் தோட்டம் - துரை. அறிவழகன்

துரை. அறிவழகன் 

கதைசொல்லி சரிதா அத்தைக்கு, 
வணக்கம்.

இந்தக் கடிதம் எழுதும் போது என்னுடைய மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறது. கடிதம் என்று சொன்னதற்கு மன்னிக்கவும். கடலுக்கு அடியில் நான் பார்த்த அதிசய தோட்டம் குறித்த கதைதான் இது. 
கடலுக்கு அடியில் நான் பார்த்த வண்ணமயமான, ஆயிரக்கணக்கான உயிரினங்களின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்னிடம். 

வெண்மையாக நுரைத்துப் பொங்கியபடி கரையேறி வரும் அலைகளில் கால்களை நனைத்து விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு.

இந்த வருடம் அரையாண்டு விடுமுறை நாளில் அந்த அதிசயம் நடந்தது. மீன் பிடிக்கச் சென்ற போது, சிறிய படகில் என்னையும் அழைத்துச் சென்றார் தாத்தா. கரையில் குறுகுறுப்பான மணலில் அமர்ந்தபடி கடலை பார்த்து இருந்த என்னுடைய மனம் முயல் குட்டியாக துள்ளிக் குதித்தது.

தன்னுடைய வலுவான கைகளால் துடுப்பை வலித்தார் தாத்தா. வாத்து போல கடலுக்குள் நீந்திச் சென்றது எங்களின் சிறிய படகு.
ஆகாயத்தை நிறைத்தபடி பறந்து சென்றன பறவைகளின் கூட்டம். “குக்ரூ...குக்ரூ” என்று அவைகள் எழுப்பிய ஒலி என்னை மேலும் உற்சாகம் அடையச் செய்தது. சாம்பல் நிற விமானத்தின் வடிவத்தில் கிழக்கு திசையில் பறந்து மறைந்தன அந்தப்

பறவைகள்.

“ஹா! அதோ ‘கடல் ஆலா’க்கள்” கண்கள் விரியச்  சொன்னார் தாத்தா. 

“ஓ! என்னுடைய பெயர்தான் அவைகளுக்குமா!” என்னுடைய மனம் சிறகடித்துப் பறந்தது.
சூரிய ஒளி  ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருந்தது. நீலநிற கண்ணாடியாக கடல்நீர் மின்னியது. கடலுக்கு அடியில் ஒரு அற்புதத் தோட்டத்தை வெகு தெளிவாக என்னால் பார்க்க முடிந்தது.
அப்படி ஒரு அழகான தோட்டத்தை அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. பலவிதமான மீன்கள் சுற்றிக் கொண்டிருந்தன அந்தத் தோட்டத்தில்.   
“அதுதான் பவளத் தீவு. அடுக்கப்பட்ட பாறைகள் போல் தெரிகிறதே அவைகள் எல்லாம் இறந்து போன கடல் உயிரிகள். ஜெல்லி மீன் போல அசைந்து கொண்டிருக்கும் காளான்கள் எல்லாம் பவளச்செடிகள்”
தாத்தா சொல்லச் சொல்ல என்னுடைய கண்கள் விரிந்து கொண்டே போனது. கடலுக்குள் மீன்கள் மட்டுமே வசிக்கின்றன என்று அதுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
“கடல்குதிரை,  கடல்பசு,  ஆமை,  அட்டை,  கணவாய், இறால்,  அல்லி,  தாமரை என்று அந்தக் கடல் தோட்டத்தில் சுற்றி வந்த உயிரினங்களின் பெயர்களை சொல்லி என்னை மேலும் மேலும் ஆச்சர்யப்படுத்தினார் தாத்தா.
கடலுக்குள் முளைத்து இருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தன கடல்பசுக்கள்.

கண்கள் சொருக பவளத் தீவின் அதிசயத்தை பார்த்தபடி இருந்தேன் நான். அப்பொழுது தான் என் காதுகளை கிழித்தது அந்த வெடியோசை.
வெடி வெடித்ததில் அலைகள் உயர்ந்து எழுந்தது.கடல் தோட்டத்தை சுற்றி வந்த உயிரினங்கள் சிதறி ஓடின. அதிர்ந்து போன கடலின் மட்டத்தில் ஏராளமான மீன்களும்,  பவளப் பாறைச் செடிகளும் இறந்து மிதந்தன. இறந்த மீன்களையும்,  சிதறிய

பவளச்  செடிகளையும் தங்கள் படகில் சேகரித்தனர் சில மீனவர்கள். 

சிவப்பு,  மஞ்சள்,  இளஞ்சிவப்பு நிறங்களில் காளான்கள் போல வளர்ந்து நின்ற பவள பாறைகளை வெட்டி எடுத்து படகில் நிறைத்தனர் சிலர். வேறு சிலர் சங்கு,  சிப்பிகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.
போதுமான மீன்களைப் பிடித்தவுடன் தாத்தாவின் முகம் திருப்தியில் ஜொலித்தது. படகு மீண்டும் வாத்து போல கரையை நோக்கிச் செல்லத் தொடங்கியது. துடுப்பை வலித்தபடி மேலும் பல விஷயங்கள் சொன்னார் தாத்தா.
“இப்போது அமைதியாக இருக்கும் இந்த பவளச்செடிகள் இரவில் கைகளை நீட்டி சிறிய உயிரினங்களை பிடித்து விழுங்கிவிடும் தெரியுமா”

தாத்தா சொன்னதைக் கேட்டவுடன் கடலில் அசைந்து கொண்டிருந்த ஜெல்லி மீன் போன்ற பவளப் பாறைகள் என் நினைவில் வந்தன.

பூச்சிக்கொல்லி,  இதய நோய் போன்றவைகளுக்கு மருந்து  தயாரிக்க பவளப்பாறைகள் உதவுகின்றன என்கிற விஷயத்தையும் தாத்தா மூலம் நான் தெரிந்து கொண்டேன். 
அன்று இரவு தூங்குவதற்கு முன்பு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த சுனாமி குறித்தும் தாத்தா சொன்னார். சுனாமி அலைகளை பவளப் பாறைகள் தடுத்த கதைகளையும் விளக்கமாகச் சொன்னார்.
பகலில் சுண்ணாம்பு திட்டுகள் போல உறக்கத்தில் காட்சி அளிக்கும் பவளப் பாறைகள் என் நினைவில் எழுந்தது. அன்று இரவு வண்ண பவளத் தாவரங்களின் கைகள்  அசைந்து அசைந்து என்னை தூங்கவிடாமல் செய்தன. 
வெடியோசை கேட்டு அலறிய மீன் குஞ்சுகளின் நினைவும் எனக்குள் எழுந்தது. வண்ணப்பூச்சு,  சிமெண்ட்,  சலவைத்தூள்,  அழகுசாதன பொருள்கள், ஆபரணங்கள்  என ஏராளமான பயன்பாட்டிற்கு பவளப் பாறைகள் வெட்டி எடுத்து செல்லப்படும் காட்சி நிழலாக என் கண்முன்  அசைந்தது
பலவற்றையும் நினைத்தபடி புரண்டு புரண்டு படுத்தபடி இருந்த நான் நடு இரவுக்குப் பின்பு அசந்து தூங்கத் தொடங்கினேன்.

வானத்தை தொடும் உயரத்திற்கு இராட்சத அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. பெரும் இரைச்சல் சத்தத்தில் பூமி ஆடியது. மரங்கள் சாய்ந்து விழுந்தன. பறவைகள் அலறியபடி பறந்து மறைந்தன.
பதறி அடித்து எழுந்தேன். அருகில் குறட்டைவிட்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்தார் தாத்தா.
இதுதான் நான் பார்த்த பவளப் பாறைகளின் கதை.

அன்புடன், 
ஆலா.