சென்னை,நவ.23- கரும்பு விவசாயத்தையும், விவசாயி களை பாதுகாத்திட ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 விலை வழங்கிட வேண்டும் என்று சிஏசிபி தலைவரிடம் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கு கரும்பு விலை நிர்ணயம் செய்திட கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்றது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிசன் தலைவர் (CACP) டாக்டர்.விஜய் பவுல்சர்மா மற்றும் இணை செய லாளர் ரத்தன் லால் டாக்கா, மாநில வேளாண்துறை முதன்மை செயலாளர் அபூர்வா மற்றும் மாநில சர்க்கரை துணை ஆணையர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தனியார் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குநர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தை கைவிடுக!
இக்கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2011-12 இல் 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. எட்டு லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது. தமிழ்நாட்டில் சாகுபடி நிலப்பரப்பில் 5 சதவீதம் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளில் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து 2024-25 நடப்பு பருவத்தில் 2.25 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. ஒன்றிய அரசின் கொள்கைகளாலேயே தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 8.5 சதவீத பிழிதிறனுக்கு கரும்பு விலை அறிவித்து வந்ததை பிழிதிறனை படிப்படியாக உயர்த்தி 10.25 சதவீதமாக உயர்த்தி விலை அறிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசை நிர்ப்பந்தித்து வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை 2018 இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றச் செய்தனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி மாநில அரசு கரும்புக்கு பரிந்துரை விலை அறிவித்து வழங்கி வந்ததை (State Advised Price) ரத்து செய்து விட்டது. ஒன்றிய அரசு உற்பத்திச்செலவுக்கு ஏற்ப கரும்பு விலையை உயர்த்தி வழங்கவில்லை. இத னால் தமிழ்நாட்டில் விவசாயமே பாதிக்கப் பட்டுள்ளது. கரும்பு விவசாயத்தில் இடு பொருட்கள், விலை உயர்வு வெட்டுக்கூலி உயர்வு காரணத்தால் கரும்பை கைவிட்டு விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு சென்றதால் கரும்பு சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துவிட்டது. 12 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மாநில அரசு கடந்த மூன்று ஆண்டு களில் 645 கோடி ரூபாய் கரும்புக்கு ஊக்கத் தொகையாக வழங்கிய நிலையிலும் மூன்றாண்டுகளில் ஒரு லட்சம் ஏக்கர் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இந்த நிலைமைகளை மாற்றி கரும்பு விவசாயத்தையும், விவசாயிகளை பாது காத்திட ஒன்றிய அரசு 9.5 சதவீதம் பிழி திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 விலை வழங்கிட வேண்டும். “சர்க்கரை விற்பனைக்கு மாதா மாதம் சர்க்கரை ஆலைகளுக்கு இலக்கு நிர்ணயித்திடும் முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளித்திட வேண்டும்”. ஒன்றிய அரசு தற்போது முன்மொழிந்துள்ள சர்க்கரை கட்டுப்பாடு சட்டம் 2024 அமலானால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் 14 நாட்களில் பணம் தர வேண்டும் என்றுள்ள 1966 கரும்பு சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டு விடும். இது நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு எதிரானது. எனவே ஒன்றிய அரசு சர்க்கரை கட்டுப்பாடு சட்டம் 2024-ஐ நிறைவேற்றாமல் கைவிட வேண்டும். இவ்வாறு டி.ரவீந்திரன் பேசினார்.